எண்ணூர் ரயில் நிலையத்தில் கோளாறு! புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு.. வடசென்னை மக்கள் கொந்தளிப்பு
சென்னை: எண்ணூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கிருந்து சென்ட்ரல் வரும் புறநகர் மின்சார ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டை - நெல்லூர் என 176 கி.மீக்கு புறநகர் மின்சார ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த பாதை பெரும்பாலான வடசென்னையை கவர் செய்கிறது. பேசன் பிரிஜ், தண்டையார் பேட்டை, கொருக்கு பேட்டை, வஊசி, திருவொற்றியூர், விம்கோ போன்ற ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. இங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வேலைக்காக தென் சென்னையை நோக்கி வருகின்றனர்.

இவர்களுக்கு இந்த புறநகர் ரயில்கள் மட்டுமே எளிய போக்குவரத்து வசதியாகும். பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேராது என்பதால் ரயில்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில் எண்ணூர் ரயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கோளாறு ஏற்பட்டதால் அங்கிருந்து சென்ட்ரல் நோக்கி வரும் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதல் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் மக்கள் எண்ணூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனையடுத்து பிரச்னையை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரலிலிருந்து தாம்பரம், அரக்கோணம் போன்ற வழித்தடங்களில் ரயில்களை இயக்க 4 பாதைகள் இருக்கும் நிலையில், சென்ட்ரல் டூ எண்ணூர் வரை ரயில்களை இயக்க மூன்று பாதைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால் ரயில்கள் அடிக்கடி வராமல் 30 நிமிடங்களுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த ரயிலும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கொதித்தெழுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications