வருமான வரித்துறை முடிவினை எதிர்த்து.. சென்னை தாம்பரத்தை சேர்ந்த பிரபல கல்வி நிறுவனம் வழக்கு
சென்னை தாம்பரத்தில் பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வரும், ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் ஜெ.ஸ்ரீநிஷா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில். 2011-12-ம் ஆண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரையிலான அறக்கட்டளை பதிவை முன்தேதியிட்டு ரத்து செய்த வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை தாம்பரத்தில் பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வரும், ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் ஜெ.ஸ்ரீநிஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஸ்ரீநிஷா கூறுகையில், "1984-ம் ஆண்டு எங்களது ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

மருத்துவம், என்ஜினீயரிங், துணை மருத்துவம், நிர்வாக மேலாண்மை உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப படிப்புகளை கொண்ட பல கல்லூரிகளை எங்கள் அறக்கட்டளை நடத்தி வருகிறது. தற்போது ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் நிகர்நிலை பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு எங்களுடைய ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை அலுவலகம், என் வீடு, மற்றொரு அறங்காவலர் சந்தீப் ஆனந்த் வீடு என்று பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார். அப்போது எங்களிடம் பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கு விளக்கம் கேட்டும், 2011-12-ம் ஆண்டு முதல் 2016-17-ம் ஆண்டு வரையிலான வரவு-செலவுகளை கேட்டும், வருமான வரித்துறை சார்பில் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. நாங்கள் அதற்கு முறையான விளக்கத்தையும் அளித்தோம்.
வசூலிக்கப்பட்ட கல்விக்கட்டணம், கல்வி நிறுவனங்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் அளித்தோம். பின்னர், இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள டெல்லியில் உள்ள வருமான வரித்துறையின் சமர அமர்வில் முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, டெல்லியில் உள்ள வருமான வரித்துறை சமரச அமர்வில் மனு தாக்கல் செய்தோம். எங்கள் மனுவை விசாரித்த அந்த அமர்வு, வருமான வரிச் சட்டப்பிரிவு 12ஏஏ கீழ் பதிவு செய்யப்பட்ட எங்களது அறக்கட்டளை பதிவை ரத்து செய்து கடந்த ஆகஸ்டு 30-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. அதுவும் 2011-12-ம் ஆண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரையிலான அறக்கட்டளை பதிவை முன்தேதியிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்தேதியிட்டு ரத்து செய்ய சட்டத்தில் இடமில்லை. மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்விக்கட்டணம், மூலதன கட்டணம் உள்ளிட்டவைகளை கல்லூரி வளர்ச்சிக்காகவே செலவு செய்யப்பட்டது. அதுவும் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் கூடுதலாக 100 இடங்கள் வழங்கப்பட்டதால், அதற்கான உள்கட்டமைப்புக்குத்தான் செலவு செய்யப்பட்டது.
இதை வருமான வரித்துறை அமர்வு பரிசீலிக்காமல், அனுமானத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த முடிவு எடுப்பதற்கு முன்பு கட்டணம் செலுத்திய மாணவர்களிடம் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் விசாரணை எதுவும் நடத்தவில்லை. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால் கல்வி நிறுவனங்களை நடத்துவதில் இடையூறு ஏற்பட்டிருக்கிறது.
இது மறைமுகமாக இந்த சமுதாயத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அறக்கட்டளை பதிவை ரத்து செய்த வருமான வரித்துறை அமர்வின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications