தண்ணீருக்குள் பெண்களிடம் அத்துமீறல்..விஜிபி தீம் பார்க் ஊழியரின் விபரீத வேலை! தட்டித் தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னையில் பிரபலமான விஜிபி தீம் பார்க்கில் இளம் பெண் மற்றும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த தீம் பார்க்கின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுமுறையை கொண்டாடச் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களை கவலை கொள்ள செய்துள்ளது. கல்வி நிலையங்கள், பொது இடங்கள் என அத்துமீறும் நபர்களால் பெண்கள் அச்சப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விடுமுறையை கொண்டாடலாம் என சென்ற பெண்களுக்கும் பிரபலமான தீம் பார்க்கில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஊழியர் ஒருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஈசிஆர் சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் விஜிபி தீம் பார்க் உள்ளது. சென்னைக்கு அருகே இருக்கும் இந்த தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடுவதற்காக அதிக அளவில் மக்கள் திரள்வது வழக்கம்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 19 மற்றும் 16 வயது மகளுடன் தீம் பார்க்கில் பொழுதை கழிக்க சென்றிருக்கிறார் அங்குள்ள நீர் சறுக்கு பகுதியில் இரு பெண்களும் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அந்தப் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதை அடுத்து அந்த பெண் விஜிபி தீம் பார்க் நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார்.
ஆனால் அவர்கள் இதுகுறித்து உரிய முறையில் விசாரிக்காமல் அந்த பெண்ணிடமே அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண்களின் தாய் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பெண் அளித்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நீலாங்கரை காவல் நிலைய போலீசார் விஜிபி தீம் பார்க்கில் நீர் சறுக்கு விளையாட்டு பகுதியில் பணியாற்றி வந்த சுரேந்திரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
சுரேந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் பல நாட்களாகவே இதுபோல நீர் சறுக்கு பகுதியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத விஜிபி தீம் பார்க் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களிடம் விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையின் பிரபலமான தீம் பார்க்கில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications