செஸ் ஒலிம்பியாட் பிறகு சென்னையில் நடக்கும் மேஜர் செஸ் தொடர்! எப்போது தொடங்குகிறது! முக்கிய தகவல்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், இப்போது மற்றொரு முக்கியமான செஸ் தொடர் சென்னையில் நடைபெற உள்ளது.
கடந்தாண்டு சென்னையில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி தொடர் நடைபெற்றது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், சர்வதேச அளவில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதனைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு இந்தப் போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியதாகப் பல சர்வதேச வீரர், வீராங்கனைகளும் கூட பாராட்டினர்.
ஒலிம்பியாட்: செஸ் ஒலிம்பியாட் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைத் தொடர்ந்து ஹாக்கி தொடரையும் சென்னை வெற்றிகரமாக நடத்தியது. மேலும், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தத் தமிழ்நாடு ரெடியாகி வருகிறது. இது தவிர பார்முலா 4 போட்டிகளும் கூட சென்னையில் நடக்க உள்ளது.
இப்படி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே மீண்டும் முக்கியமான சர்வதேச செஸ் தொடர் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 15 முதல் 21-ம் தேதி வரை வரை சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் நடைபெறும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
செஸ் சாம்பியன்ஷிப்-2023: இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டி, சென்னை லீலா பேலஸில் 2023 டிசம்பர் மாதம் 15 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட்-ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவார்கள். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.
பங்கேற்பது யார்: இந்தியாவின் தலைசிறந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்களான டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்ற வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதிபெற வாய்ப்பாக அமையும் மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே. மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. தற்போது இந்தியாவில் உள்ள கிராண்ட்மாஸ்டர்களில் மூன்றில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, பிரக்ஞானந்தா. டி. குகேஷ் மற்றும் சமீபத்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி போன்ற வீரர்களுடன் தொடர்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications