2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையில் டாப்.. அசத்திய சென்னை.. பெரு நகரங்களிலேயே நம்பர் 1
சென்னை: சென்னையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற முக்கிய இந்திய நகரங்களான மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகியவற்றை விட அதிகமாக உள்ளது.
Recommended Video
சென்னையில், 8% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டு டோஸையும் பெற்றவர்களின் சதவீதம் மும்பையில் 4%, பெங்களூர் மற்றும் டெல்லியில் தலா 5%, ஹைதராபாத்தில் 3%.
இந்த நகரங்களில், டெல்லியில்தான் அதிக மக்கள் தொகை உள்ளது. அதாவது, 3.1 கோடி. அவ்வளவு மக்கள் தொகையில் 5 சதவீதத்தை, எட்டியுள்ளது டெல்லி என்பது சாதனைதான்.

மக்கள் ஆர்வம்
அதேநேரம், தடுப்பூசி குறித்த அச்சம் பெருமளவுக்கு இருந்த மாநிலம் தமிழகம். ஆனால், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆரம்பித்தது முதல் மக்கள் அதிக ஆர்வம் காட்டி தடுப்பூசி போட்டுக் கொண்டதன் விளைவாக, இப்போது நாட்டிலேயே அதிக தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட நகரமாகியுள்ளது சென்னை.

மக்கள் தொகை அடிப்படையில்
குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்ற நகர மக்கள்தொகையைப் பொறுத்தவரை, பெங்களூர் அதன் மக்கள்தொகையில் 29% பேருக்கு தடுப்பூசி செலுத்தி முதலிடத்தில் உள்ளது. சென்னை (25%), மும்பை (18%), டெல்லி மற்றும் ஹைதராபாத் (தலா 16%) ஆகிக நகரங்களில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்கள் அதிகம்
தடுப்பூசி போடப்பட்ட ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஆண்களின் சதவீதம், தடுப்பூசி போடப்பட்ட பெண்களை விட சற்றே அதிகமாக உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண் மக்கள்தொகையில் 32% பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது சென்னையில். ஆனால், தடுப்பூசி போட தகுதியான ஆண் மக்கள் தொகையில் 39% வரை தடுப்பூசி போட்டுள்ளனர். குறைந்தது ஒரு டோசாவது போட்டுக் கொண்டவர்கள் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதியவர்கள் தடுப்பூசி
சென்னையில், இதுவரை 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 24% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 58% பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 53% பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

சென்னை கமிஷனர் ககன்தீப் சிங் பேடி
சென்னையில் தடுப்பூசி பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட ஒரு காரணம், மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள, சீனியர் ஐஏஎஸ் அதிகாரி, ககன்தீப் சிங் பேடி. அவர் இதுபற்றி கூறுகையில், ஒவ்வொரு வேலை நாளுக்கும் முன்னதாக இலக்கு நிர்ணயித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் தடுப்பூசி போடுகிறோம், என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications