சபாஷ் திருநங்கைகள்.. சென்னையை அசர வைத்து.. இரண்டு சிறுமிகளையும் மீட்டு.. புல்லரித்துப்போன போலீசார்
சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகிய 19 வயது இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பி 13 வயது சிறுமி, 8வயது சிறுமியை துணைக்கு அழைத்துக்கொண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். இதை திருநங்கைகள் கண்டறிந்து சரியான நேரத்தில் போலீசாரிடம் தெரிவித்தால் குழந்தைகளை பத்திரமாக போலீசார் மீட்டனர், அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட வேளச்சேரியைச் சேர்ந்த 19 வயது இளைஞரை கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி, இன்ஸ்டாகிராமில் வேளச்சேரியைச் சேர்ந்த சூர்ய பிரகாஷ் என்ற 19 வயது இளைஞருடன் நட்பாக பழகி உள்ளார். வீட்டில் பெற்றோர் திட்டியதால், இளைஞரிடம் சிறுமி சொல்லியிருக்கிறார்.
இதை பயன்படுத்தி சூர்ய பிரகாஷ், எழும்பூர் ரயில் நிலையம் வந்துவிடுமாறு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் போய்விடலாம் என்று அழைத்துள்ளார்.

தப்பிய சிறுமி
இளைஞரின் ஆசை வார்த்தைகளை நம்பி அவருடன் ஊரைவிட்டு வெளியேறவும் சிறுமி முடிவு செய்திருக்கிறார். தனியாக செல்ல பயம் இருந்ததால் தன்னுடன் உறவுப்பெண்னான 8 வயது சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

பெற்றோர் திட்டினர்
19 வயது இளைஞருடன் 13 வயது மற்றும் 8 வயது சிறுமி ஆகியோர் எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்ததுடன் ரயிலில் ஏறி உள்ளனர். ரயிலில் இருந்த திருநங்கைகள் சிறுமிகளின் வித்தியமான நடவடிக்கைகளை கவனித்தனர். அவர்கள் சிறுமிகளுடன் பேசிய போது தான் பெற்றோர் திட்டியதால் சிறுமிகள் வீட்டை விட்டு வந்ததும், 19 வயது இளைஞருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லப்போவதும் தெரியவந்தது.

கண்டுபிடித்த போலீஸ்
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதேநேரம் குழந்தைகளை காணவில்லை என்று போலீசாரிடம் பெற்றோர் புகார் அளித்தனர். திருநங்கைகள் கொடுத்த அலார்ட் மற்றும் குழந்தைகள் காணாமல் போன புகார் ஆகியவற்றை கவனித்த சென்னை போலீசார் மாணவியின் செல்போன் சிக்னலை கண்டுபிடித்தனர் அது விழுப்புரம் அருகே செல்வதை கண்டனர். இதையடுத்து ரயில்வே போலீசாருக்கு நடந்த சம்பவங்களை சொல்லி அலார்ட் செய்தனர். அவர்கள் குழந்தைகள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட வேளச்சேரியைச் சேர்ந்த இளைஞர் சூர்ய பிரகாஷை கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம்
பெற்றோர்கள் திட்டியதால் குழந்தைகள் விபரீத முடிவுகளை எடுத்து ஆபத்துக்களை தேடிக்கொள்கிறார்கள். நல்லவேளையாக திருநங்கைகள் தகவல் கொடுத்ததால் குழந்தைகளை பத்திரமாக போலீசார் மீட்க முடிந்துள்ளது. 13 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் அளவுக்கு பெற்றோர் அனுமதித்து தவறாக முடிந்துள்ளது. குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக வளர்க்க, அவர்களிடன் அன்பு காட்டுவதுடன், அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.












Click it and Unblock the Notifications