கோவில் நிதி மோசடி- பாஜக ஆதரவு கார்த்திக் கோபிநாத்துக்கு கோர்ட் ஜாமீன்-சு.சுவாமி,எச்.ராஜா கொண்டாட்டம்
சென்னை: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கோவில் சீரமைப்புக்காக முறையான அனுமதி பெறாமல் நிதி வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளரான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. நிதி மோசடி வழக்கில் ஜாமீன் பெற்றதற்காக கார்த்திக் கோபிநாத்துக்கு பாஜகவின் எச்.ராஜா, சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியாம்மன் கோவில் சிலைகள் மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டது பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களே கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் கூறி வந்தனர்.

பொங்கிய பாஜக
இந்நிலையில் பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான சென்னையை சேர்ந்த கார்த்திக் கோபிநாத், சிறுவாச்சூர் கோவிலை சீரமைப்பதற்காக இணையம் மூலம் நிதி வசூல் செய்தார். சிறுவாச்சூர் கோவில் சீரமைப்புக்காக ரூ34 லட்சம் வசூலித்த கார்த்திக் கோபிநாத் அப்பணத்தை மோசடி செய்தார் என்பது புகார். இப்புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் கார்த்திக் கோபிநாத். கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்தும் வந்தார்.

கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்
இதனிடையே தம் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திக் கோபிநாத் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையில் கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட ணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை வரும் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி நீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் கார்த்திக் கோபிநாத்துக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

எச்.ராஜா ட்வீட்
கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பாசிச, இந்துக்களுக்கு எதிரான திமுக அரசுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம் என்றும் எச். ராஜா அதில் கூறியுள்ளார்.

சு.சுவாமி வாழ்த்து
இதேபோல் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீதிமன்றத்தில் திமுக மிகப் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. கார்த்திக் கோபிநாத்துக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications