சென்னிமலையை 'ஏசுமலை'யாக மாற்றுவோம்- 'சர்ச்சை பேச்சு' சரவணன் ஜோசப் அதிரடி கைது- தூக்கியது போலீஸ்!
சென்னை: தமிழர்களின் புனித தலமான சென்னிமலையின் பெயரை ஏசுமலை என மாற்ற கோரிக்கை விடுத்து சர்ச்சையை கிளப்பிய கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பின் தலைவர் சரவணன் ஜோசப் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் சென்னிமலையில் பதற்றம் தணிகிறது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கதொழவு கத்தக் கொடிகாடு என்ற இடத்தில் கிறிஸ்தவர்களின் ஜெபக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டமானது ஜான் பீட்டர் என்பவரது வீட்டில் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடத்தப்பட்டது. பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ஜெப கூட்டம் நடத்த இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சையானது. இதனால் இருதரப்பினரிடையே மோதலும் ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் 2 பேர் கைதும் செய்யப்பட்டனர்.

ஏசுமலையாக்க கோரிக்கை: அதேநேரத்தில் இந்து முன்னணி அமைப்பினரைக் கண்டித்து சென்னிமலையில் கடந்த செப்டம்பர் 26-ந் தேதி கிறிஸ்தவ முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கிறிஸ்தவ முன்னணியின் தலைவர் சரவணன் ஜோசப், சென்னிமலையின் பெயரை கல்வாரி மலை அல்லது ஏசு மலை என பெயர் மாற்றம் செய்வோம் என எச்சரிக்கை விடுத்தது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
பிரம்மாண்ட போராட்டம்: கிறிஸ்தவ முன்னணியின் தலைவர் சரவணன் ஜோசப்பின் இந்த பேச்சைக் கண்டிக்கும் வகையில் சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று "சென்னிமலை எங்கள் மலை" என முழக்கமிட்டனர். இதனால் சென்னிமலை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.

பாதிரியார் வருத்தம்: இதனிடையே சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் குணசேகரன் சாமுவேல் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கிறிஸ்தவ முன்னணியின் சென்னிமலையின் பெயரை மாற்றும் கோரிக்கையை கண்டித்ததுடன் கண்டனமும் தெரிவித்திருந்தார். மேலும் "வீணான மதக்கலவரத்தை கிறிஸ்தவ முன்னணியினர் கொண்டு வருகின்றார்கள். இதற்கு யாரோ பின்னணியில் இருந்து உதவி செய்வது போல் அறிகிறேன். வீணாக தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கி வீணான காரியத்தை செய்து வருபவர்கள் மீது அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிரியார் குணசேகரன் சாமுவேல் வலியுறுத்தி இருந்தார்.
அதிரடி கைது: இந்நிலையில் கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த சரவணன் ஜோசப்பை போலீசார் இன்று செங்கல்பட்டில் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் சென்னிமலை புனிதத் தலப் பகுதியில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications