சிதம்பர் நடராஜர் கோயிலில் அதிக பக்தர்கள் தரிசனம்? சென்னை ஐகோர்ட முக்கிய உத்தரவு
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்து. ஆனால் அரசின் உத்தரவை மீறி கனகசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பித்த அரசாணைக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர்?
என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் முக்கிய வாதம் முன் வைக்கப்பட்டது.
அதாவது, கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதனை கடந்த மார்ச் முதல் அமல்படுத்தி வருவதாகவும், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள், கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அறநிலையத்துறை தரப்பில், தீட்சிதர்கள் தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய முடியாது என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து திரும்ப மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த குழுவினர், வார நாள், வார விடுமுறை நாள், விழா நாள் என மூன்று நாட்கள் நேரில் ஆய்வு செய்து, தீட்சிதர்களின் தற்போதைய திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா? அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? அல்லது பக்தர்கள் இடையூறுகளை சந்திக்கிறார்களா? என்பது குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications