வாக்காளர் பட்டியலில் குளறுபடி.. தமிழக அதிகாரி ஆக்ஷன் எடுப்பதே இல்லை.. சுனில் அரோராவிடம் திமுக புகார்
சென்னை: ஏப்ரல் இறுதியில் சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடியை சரி செய்ய திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்போதாய சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் உயர்மட்டக் குழு அதிகாரிகள் குழு கடந்த டிசம்பர் 22, 23-ந் தேதிகளில் சென்னைக்கு வந்திருந்தனர்.
அப்போது மாநில அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை வங்கி அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, தேர்தலை சுதந்திரமாக நடத்துவது குறித்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் 8 அதிகாரிகள் கொண்ட குழு இன்று சென்னை வந்தது. இவர்கள் தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார்கள்.
சட்டசபை தேர்தல் தொடர்பாக 2 நாட்கள் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இன்று பகல் 12 மணிக்கு கிண்டி நட்சத்திர ஹோட்டலில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் சுனில் அரோராவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கலந்து கொண்டுள்ளார்.
தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி பிப். இறுதியில் அறிவிக்க வாய்ப்பு?
இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்தார். இதை பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றன.
திமுக எம்பி ஆர் எஸ் பாரதி கூறுகையில் வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து புகார் கொடுத்தால் தமிழக தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுப்பதில்லை. வாக்காளர் பட்டியல் முழுமையாக சரி செய்யப்படவில்லை என தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளன. எந்த மாதத்தில் தேர்தல் வைத்தாலும் அதை சந்திக்க திமுக தயார் நிலையில் இருப்பதாக ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.