பிரிவு உபச்சார விழாவுக்கு நோ..! சேம்பருக்கும் வரவில்லை..! சென்னையிலிருந்து புறப்பட்டார் தலைமை நீதிபதி!
சென்னை : உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வழக்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் திடீரென சென்னையிலிருந்து கொல்கொத்தா புறப்பட்டுச் சென்றார். தலைமை நீதிபதிகளுக்கு அளிக்கப்படும் பிரிவு உபச்சார விழாவையும் அவர் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இது சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
கொல்கொத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடந்த 2021 ஜனவரி மாதம் 4 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
2023 நவம்பர் 1 ஆம் தேதி இவர் ஓய்வு பெறும் நிலையில் தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அதே சமயம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனேஷ்வர் பந்தாரியை நியமனம் செய்தது. இந்த இரு பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசு தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.

வேகமான செயல்பாடு
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜியின் செயல்பாடு, வேகமாக வழக்குகளை பைசல் செய்தது, முக்கிய வழக்குகளில் சிறப்பான தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரிய வீச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை திடீரென 5 நீதிபதிகள் கொண்ட சிறிய மாநிலத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்ததன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்களையும் மாற்றும் அவசியம் ஏன் என வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பினர்.

வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
சென்னை உயர் நீதிமன்ற தலைமையாக நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக, 237 வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல 75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 2013ம் ஆண்டு துவங்கப்பட்டு, இரு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜியை மாற்றுவதும் கேள்வியை எழுப்பியிருந்தனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்
எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் முன்னாள் நீதிபதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீதிபதியே ஆட்சேபம் தெரிவிக்காதபோது வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் பிரச்சினை கிளப்புவதாக அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த பாபு முருகவேல் குற்றம் சாட்டியிருந்தார்.

முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம்
அதிமுக வழக்குகள், அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு, கோடநாடு வழக்கு, முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள், அறநிலையத்துறை சார்ந்த வழக்குகள் என பல முக்கியத்துவமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தலைமை நீதிபதியின் இடமாற்ற பரிந்துரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்கள் தலைமையில் உயர் நீதிமன்ற வாயில் முன் அமைதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரையை கொலிஜியம் திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜனாதிபதி ஒப்புதல்
ஆனால் எதுவும் பயனளிக்காத நிலையில் அவரது இடமாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி மேகலாய உயர் நீதிமன்றத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியை தொடரும் நிலையில் இன்று அவர் விசாரணை நடத்துவதற்காக பல்வேறு வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தது.
ஆனால் அவைகளை அவர் இன்று விசாரிக்கவில்லை. திடீரென கொல்கொத்தாவிற்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி புறப்பட்டுச் சென்றார். பொதுவாக நீதிபதிகள் இடமாற்றம் அல்லது ஓய்வின் போது பெரிய அளவில் பிரிவு உபச்சார விழா நடக்கும். அப்போது நீதிபதிகள் பேசுவது சிறப்பான பதிவாக இருக்கும்.
Recommended Video

உபச்சார விழாவை தவிர்த்த தலைமை நீதிபதி
அதிலும் தலைமை நீதிபதி இடமாற்றம் எனும்போது அவருக்கு சாம்பரில் மிகப்பெரிய பிரிவு உபச்சார விழாவுக்கு பார்கவுன்சில் மற்றும் உயர் நீதிமன்ற ஊழியர்கள் அளிக்கும் ஆனால் தலைமை நீதிபதி பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துள்ளார். அவர் விழா எதையும் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. விழாவை மறுத்து உடனடியாக கொல்கொத்தா புறப்பட்டுச் சென்றது அவர் மன வருத்தத்தில் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications