காவேரி ஹாஸ்பிடல் டூ ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை... கே.பாலகிருஷ்ணனிடம் நலம் விசாரித்த முதல்வர்..!
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதைத் தொடர்ந்து நேராக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், மருத்துவர்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

இதனிடையே தனது உடலில் ஏற்பட்ட அசவுகரியம் குறித்தும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட விதம் பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கே.பாலகிருஷ்ணன் விளக்கிக் கூறினார். அவருக்கு நம்பிக்கையும், குணம் பெற வாழ்த்தும் தெரிவித்த முதல்வர், மருத்துவர்களிடம் நல்ல முறையில் கண்காணித்து சிகிச்சை தருமாறு அறிவுறுத்தினார்.
இதனிடையே முதலமைச்சர் வரும் தகவல் முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரை வரவேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள வி.ஐ.பி.க்களுக்கான் தனி பகுதியில் கே.பாலகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மருத்துவர்கள் அறிவுறைப்படி இன்னும் சில வாரங்களுக்கு கே.பாலகிருஷ்ணன் ஓய்வில் இருப்பார் எனவும் தெரிகிறது. சளித் தொல்லையால் தான் கே.பாலகிருஷ்ணனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கக் கூடும் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மருத்துவமனைகளுக்கு சென்று இரண்டு முக்கியப் பிரமுகர்களின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தது கவனிக்கத்தக்கது. முன்னதாக காவேரி மருத்துவமனை சென்ற அவரை, அம்மருத்துவமனையின் தலைவர் அரவிந்த் செல்வராஜ் வரவேற்று ரஜினிக்கு அளிக்கக் கூடிய சிகிச்சை முறைகள் பற்றி விளக்கினார்.
இதனிடையே ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வருவதால், அது தொடர்பான விவரங்களை சேகரிக்க காவேரி மருத்துவமனை வாயிலில் செய்தியாளர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications