தாய்மாமாவுக்கு 100வது பிறந்தநாள்.. “போகும்போதெல்லாம் வந்து..” பாசத்தால் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : தனது தாய்மாமாவின் 100வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிகரமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர் பண்பாட்டில் தாய்மாமன் உறவு நெகிழ்ச்சிகரமானது. தாயுடன் உடன்பிறந்த சகோதரனுடன் உறவு பன்னெடுங்காலத்துக்குத் தொடரும் வகையில், அத்தனை நிகழ்வுகளிலும் தாய்மாமனை முன்னிறுத்தும் சம்பிரதாயம் தமிழர் கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
எவ்வவு பெரிய உயரங்களுக்குச் சென்றாலும், தாய்மாமன் உறவு மதித்துப் பேணப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது தாய்மாமாவின் பிறந்தநாளையொட்டி நெகிழ்ச்சிகரமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

தாய்மாமா
திருவாரூர் மாவட்டம் பேரளம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் சொந்த ஊர். இங்குதான் முதல்வர் ஸ்டாலின் தாய்மாமன் இருக்கிறார். தயாளு அம்மாளின் அண்ணனான கோ.தட்சிணாமூர்த்தி, தனது சகோதரியின் பிள்ளைகள் அனைவரின் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். திருவாரூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவராக இருந்தவர். ஸ்டாலின் சிறு வயதில் சில காலம் தாய்மாமாவின் வீட்டில் வசித்துள்ளார். இதனால், இருவருக்குமான பாசப்பிணைப்பு உருக்கமானது.

எப்போது சென்றாலும்
முதல்வர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டத்திற்கு எப்போது சுற்றுப்பயணம் சென்றாலும், அவரது தாய்மாமா தட்சிணாமூர்த்தியைச் சென்று சந்தித்து வருவார். தொடர் பணிகள் காரணமாக ஸ்டாலின், அவரது தாய்மாமா வீட்டுக்குச் செல்லவில்லை என்றால் கூட, வயதையும் பொருட்படுத்தாமல் அவரது தாய்மாமா தானே, ஸ்டாலின் இருக்கும் இடத்திற்குச் சென்று பார்த்து பாசத்தோடு விசாரித்துவிட்டு வருவாராம். கடந்த ஆண்டு ஸ்டாலின் திருவாரூரில் ஆய்வுப் பணிக்காகச் சென்றபோது கூட அவரது தாய்மாமா தன்னை வந்து சந்தித்ததை நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

தாய்மாமா பிறந்தநாள்
இந்நிலையில், முதல்வர் முக ஸ்டாலினின் தாய்மாமா தட்சிணாமூர்த்தியின் 100வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி, அவருக்கு போனில் அழைத்து வாழ்த்துச் சொல்லி வணங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். விரைவில் வீட்டுக்கு பார்க்க வருவதாகவும் தனது தாய்மாமாவிடம் ஸ்டாலின் உறுதியளித்துள்ளாராம். தனது தாய்மாமாவின் பிறந்தநாள் பற்றி ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டு, தனது பாசத்தைக் காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

பாசம்
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது தாய் மாமாவும் கழகப் பற்றாளருமான தட்சிணாமூர்த்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு 100-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். திருவாரூர் மாவட்டத்தில் எப்போது நான் சுற்றுப்பயணம் சென்றாலும், என் மீது மிகுந்த பாசமும், பற்றும் கொண்ட அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பேன். அவரும் நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்து என்னை நலம் விசாரிப்பார்.

நினைவாற்றல் கண்டு வியக்கிறேன்
தனது வாழ்நாளில் நூறாண்டுகளைக் கண்டுள்ள அவரது நினைவாற்றல் இன்றும் என்னை வியக்க வைக்கிறது. அந்த அளவிற்கு நடப்பு விவரங்களை விரல் நுனியில் வைத்து என்னைச் சந்திக்கும் நேரங்களில் பேசுவார். அவரது நூறாவது பிறந்தநாளான இன்று, அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் நல்ல உடல்நலனுடன் எங்களோடு மேலும் பல்லாண்டு பயணித்திட இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். " எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications