ஸ்டாலின் சுற்றுப்பயணம்: ‘அந்த மேட்டர் இல்ல’ 3 மாவட்டங்களுக்கு.. தள்ளிப்போனதை கையில் எடுத்த முதல்வர்!
சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் தள்ளி வைக்கப்பட்ட வெளியூர் சுற்றுப் பயணத் திட்டம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. ஓபிஎஸ், சசிகலா சுற்றுப் பயண திட்டங்களுக்கு இடையே அரசு நிகழ்ச்சிகளுக்காக பயணிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
Recommended Video
கடந்த ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் 3 மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டிருந்த ஸ்டாலின், அந்த திட்டத்தை நாளை இரவில் சென்னையில் இருந்து தொடங்குகிறார்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், திய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்வதாக இருந்தது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

உடல்நலக் குறைவால்
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மூன்று நாட்கள் ஓய்வுக்குப் பிறகே குணமடைந்து அவர் தனது பணிகளுக்குத் திரும்பினார். எனினும், வெளியூர் பயணங்கள் தற்போதைக்கு வேண்டாம் என மருத்துவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், சென்னைடில் நடந்த சில நிகழ்ச்சிகளில் மட்டுமே கடந்த சில நாட்களாக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று வந்தார்.

நேரில் கலந்துகொள்ளவில்லை
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்தது. மருத்துவர்கள் அறிவுரை காரணமாக நேரடி வெளியூர் சுற்றுப்பயணத்தை தவிர்த்து, திருச்சி ஜமால் முகமது கல்லூரி முப்பெரும் விழாவில் காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் வெளியூர் சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள் என்றும் அதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சியில் தன்னால் நேரில் கலந்துகொள்ள இயலவில்லை எனவும் அந்த நிகழ்விலேயே தெரிவித்தார் ஸ்டாலின்.

மீண்டும் தேதி
இந்நிலையில், வேலூர், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றை வரும் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் நடத்தலாம் என முதல்வர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை கிளம்புகிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு 7 மணியளவில் ஆம்பூருக்கு செல்கிறார். 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். பின்னர் வேலூர் சென்று 12.30 மணிக்கு விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பேருந்து நிலையத்தை நிலையத்தைத் திறந்து வைக்கிறார். மாலை 4 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

திமுகவினர் உற்சாகம்
அடுத்த நாளான 30-ஆம் தேதி காலை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து அங்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன் பின்னர், சென்னைக்கு புறப்படுவார் என முதல்வரின் பயண திட்டங்கள் முடிவாகியுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் வருகை தள்ளிப்போன நிலையில், மீண்டும் உறுதி செய்யப்பட்டதால் 3 மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

மூன்றாவது நபராக
அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து, தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக தென் மாவட்டங்களில் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சியில் சசிகலாவும் தனது அரசியல் சுற்றுப் பயணத்தை நேற்று தொடங்கியுள்ளார். அதிமுக குழப்பங்கள் எதிலும் தலையிடாமல் இருந்து வரும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அரசு விழாக்களில் கலந்துகொள்வதற்காக தனது 3 மாவட்ட சுற்றுப்பயணத்தை நாளை தொடங்கவிருக்கிறார். இப்படி, சுற்றுப்பயணங்களால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications