"இந்திய பாதுகாப்புப்படை நிதானத்துடன் செயல்பட வேண்டும்" பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சென்னை: மயிலாடுதுறை மீனவர் வீரவேல் இந்திய கடற்படையால் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்எழுதியுள்ளார்.
தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படை தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

நிவாரணம் அறிவிப்பு
இதில், படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்த மீனவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் இந்திய கடற்படையால் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 3 மீனவர்கள் என 10 பேர் தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இலங்கை கடற்படையால் துயரம்
இதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

மு.க.ஸ்டாலின் கோரிக்கை
இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே, இந்த சம்பவத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications