ரூ.12 கோடி செலவில் சொந்த செலவில் நூலகம் கட்டிய ப சிதம்பரம்.. காரைக்குடியில் திறந்து வைத்த ஸ்டாலின்
சென்னை: தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு செல்கிறதா என்பதை ஆய்வு செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். முதல் நாளான இன்று காரைக்குடி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ரூ.12 கோடி சொந்த நிதியில் கட்டியுள்ள தமிழ் நூலகத்தை இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் அரசு துறைகள் சார்பாக நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்கிறதா என்பதை நேரில் கண்டு உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து காரில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார்.
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது சொந்த நிதியில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டியுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பக்கலைக்கழக நிர்வாக அலுவலக கட்டத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பின் மாலையில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது. இதன்பின் நாளை சிவகங்கை மாவட்டம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கவுள்ள ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அதன்பின் மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி வளாகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவுகளை வழங்கவுள்ளார். இதற்கான பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications