அசத்தல்.. இனி தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவை.. உன்னத திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை : தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.70 கோடி செலவில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Recommended Video
30 ஆயிரம் பேருக்கு ஓர் ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் 2 சுகாதார மையங்களுக்கு இடையே குறைந்தபட்ச இடைவெளி 8 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தொலைதூரங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனை தவிர்க்க ஏற்கனவே இல்லம் தேடி மருத்துவம் திட்டம் தமிழகத்தில் உள்ளது.

நடமாடும் மருத்துவ சேவை
அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள தொலைதூரக் கிராமங்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் வகையில், நடமாடும் மருத்துவ சேவை திட்டம் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.70 கோடி செலவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.

மருத்துவ பணியாளர்கள்
இந்த திட்டம் மூலம் தொலைதூரங்களில் உள்ள மக்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு களப் பணியாளர், ஒரு மருந்தாளுநர் என 4 பேர் கிராமங்களுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் சேவை
மேலும் அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கும் சேவைகளும் இந்த நடமாடும் மருத்துவமனையில் உள்ளது. தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும் 389 வாகனங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், சென்னை மெரீனா சாலையில் அண்ணா சதுக்கம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் மருத்துவமனை சேவை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications