44-வது செஸ் ஒலிம்பியாட்! உணவு முதல் தங்குமிடம் வரை! பார்த்து பார்த்து ஏற்பாடுகளை கவனிக்கும் முதல்வர்
சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவு முதல் தங்குமிடம் வரை பார்த்து பார்த்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் நல்கியுள்ளார்.
எந்த ஒரு சிறிய குறையும் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி அறிவுறுத்தியுள்ளார்.
188 நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு விவகாரத்திலும் மிகுந்த கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.

உக்ரைன் போர்
2022-ஆம் ஆண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியை, உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து இந்தப் போட்டியைத் தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த வேண்டும் என முன்னெடுத்த முயற்சியின் பலனாக அந்த வாய்ப்பு நமது நாட்டிற்கு அதுவும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்திற்கு கிடைத்தது.

188 நாடுகள்
188 நாடுகளில் இருந்து வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 2,500 பேர் உலகம் முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.92 கோடி நிதி ஒதுக்கி பணிகளை ஜரூராக மேற்கொண்டு வருகிறது. அமைச்சர்கள் மதிவேந்தன் மற்றும் மெய்யநாதன் ஆகிய இருவரும் வாரத்திற்கு மூன்று நாட்கள் நேரில் ஆய்வு நடத்தி பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

முதல்வர் விசிட்
இந்நிலையில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்திற்கு சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், வீரர்களுக்கு தங்குமிடங்கள் எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவு வகைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா ஆகியோர் முதல்வருக்கு இது தொடர்பாக விளக்கிக் கூறினர்.

டிஜிபி வருகை
ஒரு பக்கம் தலைமைச் செயலாளர், முதலமைச்சர் ஸ்டாலின் என பரபரப்பாக ஆய்வு நடத்திய வேளையில் மற்றொருபுறம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தினார் தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு. உலகமே தமிழகத்தை உற்று நோக்கவுள்ள ஒரு நிகழ்வு என்பதால் மிகுந்த சிரத்தை எடுத்து பார்த்து பார்த்து முன்னேற்பாடுகளை செய்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications