தமிழ்நாட்டில் முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு! 21 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்பு!
சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மருத்துவ சுற்றுலா மாநாட்டில் "Tamil Nadu - Where the world comes to heal" என்ற தமிழ்நாட்டில், தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Hospitals & Healthcare Providers - NABH) அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார்.

மேலும், இம்மாநாட்டில், பல்வேறு மருத்துவமனைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நியாயமான விலையில் மருத்துவச் சேவைகளை அளிப்பதன் மூலம், சுகாதாரத் தேவைகளுக்கான நம்பகமான இடமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு உட்கட்டமைப்பானது, சிறந்த மருத்துவ நடைமுறைகளைக் கையாளுவதற்கு உதவிகரமாக விளங்குவதால் மருத்துவ சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

இம்மாநாட்டில் பங்களாதேஷ், நேபாளம், சவுதி அரேபியா, ஓமான், மியான்மர், ஸ்ரீலங்கா, மொரிசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் என 21 வெளிநாடுகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
மேலும், இம்மாநாட்டில் தமிழ்நாட்டின் 120 தனியார் மருத்துமனைகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் பிரபலமான மருத்துவர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சித்தா, யோகா, ஆயுஷ் துறைகளின் மருத்துவர்கள், ஆரோக்கிய சுற்றுலா மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் என 350 பேர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் மற்றும் பிற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications