44-வது செஸ் ஒலிம்பியாட்! முன்னேற்பாடுகள் மும்முரம்! நேரடியாக களமிறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை நேரில் சென்று இன்று ஆய்வு நடத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இம்மாதம் 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளதால் செஸ் ஒலிம்பியாட் மீது முதலமைச்சர் ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

செஸ் ஒலிம்பியாட்
2022-ஆம் ஆண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியை, உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. எனவே இந்தப் போட்டியைத் தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த முயற்சிகளை மேற்கொண்டது. இதனிடையே அந்த தருணத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்த காரணத்தால் மற்ற மாநிலங்களை புறந்தள்ளி அந்த வாய்ப்பு சென்னைக்குக் கிடைத்தது.

மிகப்பெரிய பெருமை
ஜூலை 28 அன்று 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது. ஏனெனில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என 2,500 பேர் உலகம் முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார்கள்.

92 கோடியே 13 லட்சம்
இதனால் சர்வதேச அளவில் தமிழகம் அனைவராலும் உற்றுநோக்கக்கூடிய ஒரு மாநிலமாக மாறப் போகிறது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்காக தமிழக அரசு 92 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியிருக்கிறது. 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை சில வாரங்களுக்கு முன்னால் முதல்வர் வெளியிட்டார். அதோடு மட்டுமல்லாமல் நாள் தவறாமல் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகள் பற்றி முதல்வர் கேட்டறிந்து வந்தார்.

நேரில் ஆய்வு
இதனிடையே இன்னும் போட்டி தொடங்க 15 நாட்கள் மட்டுமே உள்ளதால் மாமல்லபுரத்திற்கு ஒரு விசிட் அடித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்துகிறார். முதல்வர் நேரடியாக செல்லவுள்ளதால் விளையாட்டுத்துறை உயர் அதிகாரிகள் முழுமையாக அங்கு முகாமிட்டு பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications