சிபிஐஎம் கட்சி அலுவலகத்துக்கு போன முதல்வர் ஸ்டாலின்.. சீதாராம் யெச்சூரி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி!
சென்னை: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியின் திருவுருவப் படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை தியாகராய நகரில் உள்ள சி.பி.ஐ.எம் அலுவலகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த வியாழக்கிழமை அன்று உடல்நலக் குறைவால் காலமானார். சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் யெச்சூரி.

மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சீதாராம் யெச்சூரியின் உடலை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல், டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு, சீதாராம் யெச்சூரியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது உடலுக்கு நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான், ராஜிவ் சுக்லா உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளரும் மக்களவை திமுக தலைவருமான டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்திற்கு சென்ற தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அங்கு மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் உரிமைகளுக்காக முழங்கிய தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களுக்குப் புகழ்வணக்கம்! செவ்வணக்கம்! மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்துவிட்ட அவரது புகழ் - அவரது மக்கள் தொண்டைப் போல் எப்போதும் போற்றப்படும்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications