உங்கள் துறையில் முதலமைச்சர்.. புதுமைத் திட்டம்.. காவலர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற ஸ்டாலின்!
சென்னை: பொதுமக்களுக்கு எப்படி 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டமோ அது போல் அரசு ஊழியர்களுக்கு 'உங்கள் துறையில் முதலமைச்சர்' என்ற புதுமைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
அந்த வகையில் முதல் நிகழ்வாக "உங்கள் துறையில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் காவலர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
அமைச்சர் எச்சரித்தும் ஆட்டம்! அதிகார மீறலில் கவுன்சிலர் கணவர்! கோவை மாநகராட்சியில் புதிய சர்ச்சை!
வாரம் ஒரு நாள் லீவு
மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றிவரும் காவல்துறையினரின் நலன் காத்திட - காவலர்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக் காத்திடவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம்நிலைக் காவலர் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கியது தமிழக அரசு.
பல சலுகைகள்
காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையினை 60 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது, இரவு ரோந்துப் பணிக்கு செல்லும் அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் வரையிலான அதிகாரிகளுக்கு சிறப்புப் படியாக மாதம் ரூ.300- வழங்கியது, 15 நாட்களுக்கு ஒரு முறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குதல், காவல் ஆளிநர்கள் விடுப்பு எடுக்க வசதியாக சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட (CLAPP) விடுப்பு செயலி வெளியீடு, போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது அரசு.
உங்கள் துறையில் முதலமைச்சர்
அந்த வகையில், காவலர்களின் குறைகளை கேட்டு அவற்றை களைந்திட "உங்கள் துறையில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று காவலர்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளைக் கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மரக்கன்று நட்டார்
அதனைத் தொடர்ந்து, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பு எழுதி கையொப்பமிட்டார். முன்னதாக, சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்தும் விதமாக முதலமைச்சர் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார்.