திருமாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பர்த்டே கிஃப்ட்.. ‘கவலையே படாதீங்க’ - மேடையிலேயே வாக்குறுதி!
சென்னை : விசிக தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு உறுதியை அளித்திருக்கிறார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
Recommended Video
பாஜகவோடு திமுக இணக்கமாகச் செல்வதாக கடந்த சில வாரங்களாக பேச்சுகள் அடிபட்டு வந்தன. குறிப்பாக, பிரதமர் மோடி சென்னைக்கு வந்து சென்ற பிறகு இந்தப் பேச்சுகள் அதிகமாக ஒலிக்கத் தொடங்கின.
இது காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தக் கொள்கைக் கூட்டணி தொடரும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், நேற்று மாலை நடைபெற்ற திருமாவளவன் மணி விழா மேடையிலும், பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே வேலை இல்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஒரே கதி நீங்கதான்.. துணிச்சலா கிளம்புங்க.. தேசிய தலைவரா வரணும்- ஸ்டாலின் பாதைக்கு கோடு போட்ட திருமா!
எல்லா உரிமையும் உண்டு
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மணிவிழா நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் சகோதரர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியை நானும் பார்த்தேன். படித்தேன். அந்த பேட்டியில் நம்முடைய திருமா குறிப்பிட்டுச் சொன்னார். இங்கே கூட அதைத்தான் பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அறிவுரையாகவும், திருமா ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். அதைச் சொல்வதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அதை மனப்பூர்வமாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.
சமரசமே கிடையாது
''பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளிடம் குறைந்தபட்ச சமரசத்தை தி.மு.க. கையாண்டால் கூட, தி.மு.க அணியில் பா.ஜ.க எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப் போய்விடும் என்று சகோதரர் திருமா அதில் சொல்லியிருக்கிறார். தி.மு.க.வைப் பொறுத்தவரை தனது கொள்கையில் எப்போதுமே உறுதியாக இருக்கும். சகோதரர் திருமா கூறுவது போல் குறைந்தபட்ச சமரசத்தைக் கூட தி.மு.க செய்து கொள்ளாது.
பொறுப்பில் இருக்கிறேன்
நான் இப்போது இரு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறேன், திருமா அவர்களுக்குத் தெரியும், எல்லோருக்கும் தெரியும், உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், ஒன்று கட்சித் தலைவர் பொறுப்பு, இன்னொன்று அனைவருக்குமான தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பு. உங்களால் உருவாக்கப்பட்டவன்தான் நான்; உங்களால் உட்கார்ந்திருக்கக்கூடியவன் நான்.
திருமா கவலையே பட வேண்டாம்
சகோதரர் திருமா கொஞ்சம் கூட, கிஞ்சிற்றும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டுக் கொடுக்கமாட்டான். சகோதரர் திருமா கூறுவதுபோல், குறைந்தபட்ச சமரசமும் செய்து கொள்ளமாட்டான் இந்த ஸ்டாலின், உங்கள் சகோதரன் நான் என்று உரிமையோடு இதை சொல்ல விரும்புகிறேன் நான். சனாதன சக்திகளின் சங்கத்துவத்தை நாம் ஒன்றிணைந்து வீழ்த்துவோம்! இதுதான் திருமாவளவனின் அறுபதாவது பிறந்தநாளில் நான் வழங்கக்கூடிய மிகப் பெரிய கொள்கைப் பரிசு" எனத் தெரிவித்துள்ளார்.