2024ல் மத்தியில் ‘ஸ்டாலின் மாடல்’! வந்து விழுந்த கேள்வி! பளீச் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 2024ல் மத்தியில் ஸ்டாலின் மாடல் வருமா என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ' வரும் என்ற நம்பிக்கையில்தான் பணியாற்றி வருகிறோம்' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
தனியார் தொலைக்காட்சி சார்பில் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் 'தி டவுன் ஹால்; என்ற பெயரில் கருத்தரங்கு மற்றும் விவாத நிகழ்ச்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கியதோடு, கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை
முதல்வர் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," அனைத்துத் துறை வளர்ச்சி - அனைவர்க்குமான வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி - அனைத்து சமூக வளர்ச்சி என்பதை எனது ஆட்சியின் விரிந்த எல்லையாக அறிவித்து இருக்கிறேன். சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - இன உரிமை - மொழிப்பற்று - மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் சேர்க்கையாக திராவிட மாடல் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கருத்தியல் மட்டுமல்ல - செயல்வடிவம் ஆகும். கண்ணை மூடிக் கொண்டு கனவு காணுங்கள் என்று நான் சொல்லவில்லை. கண்ணைத் திறந்து பாருங்கள் என்றே நான் சொல்கிறேன்.
திராவிடச் சிந்தனை
இட ஒதுக்கீடு - வகுப்புவாரி உரிமை - வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - ரிசர்வேஷன் - என எந்தப் பெயரை வைத்துக் கொண்டாலும் அவற்றின் உள்ளடக்கம் என்பது சமூகநீதியாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகம் கல்வியை, வேலைவாய்ப்பை, அரசியல் அதிகாரத்தை, நிர்வாகப் பொறுப்புகளை பெற முடியவில்லை. இவற்றைப் பெறுவதற்கான வாசல் தான் சமூகநீதித் தத்துவம் ஆகும். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் அனைத்து சமூக மக்களும் கல்வி, வேலை வாய்ப்புகளின் இருந்த நிலைமையையும் - இன்று அடைந்துள்ள பயன்களையும் பாருங்கள். இதுதான் திராவிடச் சிந்தனைகளின் வெற்றி யாகும்.
வடக்கு வாழ்கிறது- தெற்கு தேய்கிறது
ஒரு காலம் இருந்தது, 'வடக்கு வாழ்கிறது- தெற்கு தேய்கிறது' என்று எங்கள் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கினார்கள். ஆனால் இன்றைக்கு வடக்கை விட தெற்கு பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது. இதுதான் திராவிடச் சிந்தனைகளின் வெற்றியாகும். இன்றைக்கு மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம். வேலைக்கு போகும் பெண்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்திருக்கிறோம் என்பது ஒரு பக்கம். இந்த வசதிகாரணமாக ஏராளமான பெண்கள், வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்தின் பல்வேறு பணிகளை முன்னின்று செய்வதற்கு தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்களது குடும்பம் மட்டுமல்ல, இந்த சமூகமும் வளர்ச்சி பெறுகிறது. இதுதான் திராவிட மாடல் சிந்தனையின் வெற்றியாகும்.
முன்னணி மாநிலமாக தமிழ்நாடு
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடனும் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சிக் குறியீட்டில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நிலைத்துநிற்கக்கூடிய வளர்ச்சிக் குறியீடுகளைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. உயர்கல்வியில் சேர்வோர் தொகை 51.8 சதவிகிதமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை என்பது 6.8 சதவிகிதமாக இருக்கும் போது நமது மாநிலத்தில் 3.63 சதவிகிதம் தான். பட்டினிச் சாவுகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர் எண்ணிக்கை 4 சதவிகிதம் மட்டுமே.
திராவிட மாடல்
இந்தியா முழுமைக்கும் உள்ள தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டில் இருக்கிறது. தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களில் 21 தமிழ்நாட்டில் இருக்கிறது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. - இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடியாகும். ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல்.மக்களின் ஏற்றத்தை பார்ப்பது திராவிட மாடல். இறக்குமதியை மட்டும் கணக்கிடுவது வேறு மாடல். இரக்க சிந்தனையோடு திட்டமிடுவது திராவிட மாடல். சில மாநிலங்கள் வளர்ந்தால் போதும் என்று நினைப்பது வேறு மாடல்.
ஸ்டாலின் மாடல்
அனைத்து மாவட்டங்களும் வளர்க்க நினைப்பது திராவிட மாடல். ஒற்றைச் சிந்தனை கொண்டது வேறு மாடல். ஒருமைச் சிந்தனை கொண்டது திராவிட மாடல். ஒற்றுமையின் வேற்றுமை பார்ப்பது வேறு மாடல். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது திராவிட மாடல். அதனால் தான் அனைத்து மாநிலங்களிலும் திராவிட மாடல் சிந்தனை பரவ வேண்டும் என்று நினைக்கிறோம்." என பேசினார். அப்போது 2024ல் மத்தியில் ஸ்டாலின் மாடல் வருமா என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ' வரும் என்ற நம்பிக்கையில்தான் பணியாற்றி வருகிறோம்' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.