அடுத்த வாரம் பிரதமரை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி பயணம்!
சென்னை: பிரதமர் தலைமையில் நடைபெறும் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியாக சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவைத் தொகை, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் கோரிக்கை விடுப்பார் எனத் தெரிகிறது.
இந்தியாவுக்குள் போட்டியா? தமிழகம் பெரிய மாநிலம்.. உலக நாடுகளுடன் போட்டி! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
முதலமைச்சர்கள் மாநாடு
பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் மாநாடு வரும் டிசம்பர் 5ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இவருடன் தலைமைச் செயலாளர் உட்பட முதலமைச்சரின் செயலாளர்களும் டெல்லி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமருடன் சந்திப்பு
டிசம்பர் 5ஆம் தேதி முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியாக சந்தித்து பேச அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீட் தேர்வு விலக்கு, நிலுவைத் தொகை, கூடுதல் நிதி ஒதுக்கீடு, மழை வெள்ள நிவாரணத் தொகை குறித்தெல்லாம் பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை மனு வழங்குவார் எனத் தெரிகிறது.
அதிகாரிகள் மும்முரம்
இதனிடையே பிரதமருடனான சந்திப்பின் போது அவரிடம் முதல்வர் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதேபோல் பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் மாநாட்டில் தாம் ஆற்ற வேண்டிய உரையை தயாரிக்கும் பணியில் முதல்வர் ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முதல்வரின் டெல்லி பயணம் 2 அல்லது 3 நாட்கள் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
முக்கிய நிகழ்வு
இதனிடையே பிரதமர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லவிருப்பது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.