'உச்சம் தொடாமல் அரசியலை விட்டு செல்லமாட்டேன்.. சி.கே.குமரவேல் பிரத்யேகப் பேட்டி
சென்னை: அரசியலில் உச்சம் தொட விரும்புகிறேன். அது நிறைவேறும் வரை அரசியலிலிருந்து விலக மாட்டேன் என்று நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே.குமரவேல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தில் கடலூர் மக்களவை தொகுதி பொறுப்பாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பதவிவகித்து, அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகிய சி.கே.குமரவேல் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.
கேள்வி: மக்கள் நீதி மய்யத்துக்கும் குமரவேலுக்கும் என்ன தான் பிரச்சனை?
பதில்: மக்கள் நீதி மய்யத்திற்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை என்று ஒன்றும் இல்லை. அருணாச்சலம், மகேந்திரன் உள்ளிட்டோர் கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். இது குறித்து ஒவ்வொருமுறையும் எடுத்துக்கூறியும் அதை தலைமை செவிமடுக்காததால் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கேள்வி: கமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பதில்லையா? அவர் யார் பேச்சை கேட்கிறார் என நினைக்கிறீர்கள்?
பதில்: மக்கள் நீதி மய்யத்தில் தன்னை சுற்றியுள்ள இரண்டாம் நிலை தலைவர்களின் பேச்சை மட்டுமே கமல் கேட்கிறார். கட்சியின் அடிமட்ட அளவில் அவர் பார்வை இல்லை.
பொள்ளாச்சி கொடூரம்... பார் நாகராஜனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
கேள்வி: கடலூர் தொகுதிக்கு உங்களை நீங்களே வேட்பாளர் என அறிவித்துக்கொண்டது பற்றி கமல் விளக்கம் கேட்டபோது, நீங்கள் ஏன் விளக்கம் தரவில்லை?
பதில்: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய பின்பு நான் ஏன் விளக்கம் தர வேண்டும். நான் தான் விளக்கம் கோரியவுடனே கட்சியை விட்டு விலகிவிட்டேனே.
கேள்வி: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்: மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் நல்லா இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். திமுக, அதிமுகவால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் கட்சி மீது மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், உட்கட்சி விவகாரத்தில் கமல் தலையிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் தலைமையும், பார்வையும் சிறப்பாக உள்ளதால் அந்தக் கட்சி மூலம் தமிழகத்திற்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கேள்வி: நீங்கள் பேசுவதை வைத்து பார்த்தால், மக்கள் நீதி மய்யம் மீது நல்ல அபிப்ராயம் வைத்துள்ளது போல் தெரிகிறதே?
பதில்: ஆமாம், மக்கள் நீதி மய்யம் மீது நம்பிக்கையும், கமல் மீது மரியாதையும் எனக்கு இருக்கிறது.
கேள்வி: குமரவேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
பதில்: என்னைப் பொறுத்தவரை தொழிலில் என்ன சாதனைகள் நிகழ்த்த முடியுமோ அதை நிகழ்த்திவிட்டேன். புகழ், பணம், பெயர் எல்லாம் கிடைத்துவிட்டது. இப்போது அரசியலுக்கு வந்துவிட்டேன். ஆகையால் உச்சத்தை தொடாமல் அரசியலில் இருந்து செல்லமாட்டேன்.