மழைக்கால விடுமுறை.. இனி சனிக்கிழமைகளில் வகுப்புகள்.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அன்பில் மகேஷ்!
சென்னை: பள்ளிகளுக்கு கனமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் இணைந்து சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ம் தேதிகளில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த உள்ளது.
இந்த கண்காட்சியின் இலச்சினையையும், நிகழ்ச்சி நிரலையும் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு, கண்காட்சிக்கான இலச்சினையையும், நிகழ்ச்சி நிரலையும் வெளியிட்டார்.

சர்வதேச புத்தக கண்காட்சி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி எப்படி அறிவுசார்ந்த போட்டியாக இருந்ததோ, அதனைத்தொடர்ந்து தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி அறிவுசார்ந்த வாசிப்பை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக நடக்க இருக்கிறது. சிறந்த தமிழ் இலக்கியங்கள், தமிழ் படைப்புகள் உலகளவில் கொண்டு செல்லும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

எழுத்தாளர்களுக்கு அழைப்பு
இந்த கண்காட்சியில் பங்கேற்க 50 நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். குறுகிய காலமாக இருப்பதால், 20 நாடுகளில் இருந்தாவது பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வருவார்கள் என்று நம்புகிறோம். முதல் முறையாக சர்வதேச அளவில் நடத்த இருக்கிறோம். இனி வரும் ஆண்டுகளில் அதிக நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சனிக்கிழமை பள்ளிகள்
தொடர்ந்து, மழைக் காலத்தையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் நாட்களை எப்படி ஈடு செய்யப்படும் என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே மழைக்காலத்தில் விடப்படும் விடுமுறை நாட்களை ஈடுசெய்ய தேவைப்படும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இதனிடையே சமூக வலைதளம் வாயிலாக மாணவர்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் நேரடியாக விடுமுறை கோரிய நிகழ்வுகள் அரங்கேறின.












Click it and Unblock the Notifications