மக்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்... பாரதியார், வேலூநாச்சியரை மெரீனாவில் பார்த்து ரசிக்க ஏற்பாடு
குடியரசு தின அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரையில் மேலும் ஒரு வாரம் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில் இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாரதியார்,வ.உ.சிதம்பரனார், வேலூநாச்சியரை சென்னைவாசிகளும் சுற்றுலா வருபவர்களும் மேலும் ஒருவாரம் கண்டு ரசிக்கலாம்.
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக வலம் வந்தன. இதன் முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினசரியும் ஏராளமானோர் இந்த அலங்கார ஊர்திகளை பார்த்து ரசித்து புகைக்படங்கள் எடுத்து வருகின்றனர். முதல்வர் மு.க ஸ்டாலினும் நேரடியாக சென்று மக்களுடனும் மாணவர்களுடனும் பேசி செல்ஃபி எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இன்று வரை மட்டுமே மெரீனா கடற்கரையில் அலங்கார ஊர்திகள் இருக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவாரம் காட்சிப்படுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள்
சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கின்ற வகையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.01.2022 அன்று அந்த ஊர்திகளை சென்னை, தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மக்களிடையே வரவேற்பு
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மாநகர மக்கள் கண்டு களித்திடும் வகையில் சென்னை மெரினா கடற்கரை இணைப்புச் சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே பொதுமக்களின் பார்வைக்கு 20.02.2022 முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ரசித்த மாணவர்கள்
நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் பெரும்திரளாக இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 21.2.2022 அன்று இந்த ஊர்திகளைப் பார்வையிட்டு அங்கு பெரும்திரளாக கூடியிருந்த மாணவர்களுடன் உரையாடினார்.

பொதுமக்கள் கோரிக்கை ஏற்பு
இதற்கிடையே, சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் முதல் அமைச்சருக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில் இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications