"அடிதூள்".. ஸ்டாலின் அடிக்க பார்த்த "பவுண்டரி".. தாவி பிடித்து "சிக்ஸருக்கு" திருப்பிய எடப்பாடியார்!
தமிழக அரசு பணியாளர்களுக்கான சிறப்பு அறிவிப்புளை முதல்வர் அறிவித்துள்ளார்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் 4 அடிக்கிறார் என்றால், அதே பந்தை வாங்கி திருப்பி போட்டு எடப்பாடியார் சிக்ஸர் அடிக்கிறார்.. அப்படித்தான் ஒரு செயலை ஒரே நாளில் செய்து மொத்த பேரையும் திகைக்க வைத்து விட்டார்..!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மறைந்த தலைவர்கள் கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, அள்ளி அள்ளி தந்திருக்கிறார்கள்..
எப்போதெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து போராடுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களை சமரசம் செய்து தங்களுடன் அரவணைத்து கொள்வார்கள்.
அறிவிப்பு
அந்த வகையில், இருவருமே பல திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்திருக்கிறார்கள்.. இதில் ஜெயலலிதா கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம்.. இவர்களுக்கு நிறைய செய்திருக்கிறார். அதுபோலவேதான் எடப்பாடி அரசும் ஏகப்பட்ட சலுகைகளை செய்து வருகிறது. இந்நிலையில், சில கோரிக்கைகளை முன்வைத்து, பிப்ரவரி 2-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்றும் அரசு ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.. இந்த போராட்டத்துக்கு திமுக ஆதரவு தந்திருந்தது..
முக ஸ்டாலின்
இது தொடர்பாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், "அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒரு மாநிலத்தின் அடிநாதம் என்பதை திமுக அரசு எந்த காலத்திலும் மறந்தது இல்லை... அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலனில் எப்போதும் அக்கறை செலுத்தும் அரசாக திமுக அரசு இருந்தது... எதிர்காலத்திலும் அப்படித்தான் இருக்கும்.. அதிமுக ஆட்சியானது, அரசு ஊழியர்களை மதித்ததா? அவர்களது கோரிக்கைகளை செவி மடுத்ததா? பிப்ரவரி 2-ம் தேதி நடத்தும் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று கூறியிருந்தார். இந்த போராட்டத்தை வைத்து, எடப்பாடி அரசு மீதான அதிருப்தியைதான் திமுக தரப்பு வெளியிட்டு, அதன்மூலம் அரசு ஊழியர்களின் நன்மதிப்பை பெற முயன்றது.
அறிக்கை
அவ்வளவுதான் தாமதம்.. தடாலடியாக எடப்பாடியார் ஒத்த அறிக்கையை வெளியிட்டு, திமுகவின் மொத்த பிளானையும் நொறுக்கி விட்டார்.. அதாவது, கடந்த 2019 ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்... அப்போது ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசும் உத்தரவிட்டது...
எடப்பாடியார்
மேலும் அரசு ஊழியர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டது. இதனால், துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தன.. இதைதான் எடப்பாடியார் நீக்கி உள்ளார்.. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது என்று கூறியுள்ளார்.
செல்வாக்கு
அதுமட்டுமல்ல, "கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மறப்போம், மன்னிப்போம்" என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது என்று சொல்லி ஊழியர்களை குஷிப்படுத்தி உள்ளார். இது திமுக தரப்புக்கு சற்று ஏமாற்றத்தை தந்தாலும், அரசு ஊழியர்கள் மத்தியில் கூடுதல் செல்வாக்கை எடப்பாடியாருக்கு பெற்று தந்து வருகிறது..!