அடுத்த வாரம் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்... குடிமராமத்து பணிகள் ஆய்வு
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்தவாரம் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறுவை சாகுபடிக்கு கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்த நிலையில் முதலமைச்சர் இப்போது டெல்டா மாவட்டங்களுக்கு விசிட் அடிக்க உள்ளார்.
இதனிடையே 26-ம் தேதியன்று திருச்சி செல்லும் அவர் முக்கொம்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு.. மக்களை கஷ்டப்படுத்த கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
நீண்ட இடைவெளி
நீண்ட இடைவெளிக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளி மாவட்ட சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அவர் சென்னை, சேலத்தை தவிர்த்து வேறு எந்த மாவட்டங்களுக்கும் செல்லவில்லை. எல்லா பணிகளையும் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே காணொலி மூலம் செய்து வந்த அவர் ஆய்வுக் கூட்டங்களையும் காணொலி மூலமே நடத்தினார். சென்னை, சேலத்தை தவிர்த்து அவர் வெளிமாவட்டத்தில் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா.
டெல்டா மாவட்டங்கள்
இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக இந்தாண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர், அடுத்த வாரம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகள் குறித்தும் இந்த சுற்றுப்பயணத்தின் போது முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார். முன்னதாக 26-ம் தேதி திருச்சி முக்கொம்புக்கு செல்லும் அவர் அங்கு நடைபெற்று வரும் அணை கட்டுமான பணிகளை பார்வையிடுகிறார்.
அதிமுக ஏற்பாடு
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டமைக்காக விவசாய சங்க பிரதிநிதிகள் ஒரு சிலர் மட்டும் முதலமைச்சரின் டெல்டா டூரின் போது அவரை சந்தித்து நன்றி தெரிவிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் காமராஜ் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து கார் மூலமாகவே அவர் இந்த பயணத்தில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.
முத்தரையர் சங்கம்
இதனிடையே 26-ம் தேதியன்று திருச்சி முக்கொம்பில் ஆய்வு நடத்த வரும் முதலமைச்சரை சந்திக்க முத்தரையர் சங்கத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சியில் மணிமண்டபம் அமைக்க கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளதால் அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என நேரம் கேட்கப்பட்டுள்ளதாம். கொரோனா பிரச்சனையில் இப்போது வேண்டாம் பிறகு பார்த்துக்கொள்வோம் என முதல்வர் தரப்பு நினைக்கிறதாம்.