7 தமிழர் விடுதலை- ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்: சட்டசபையில் முதல்வர் எடப்பாடியார் நம்பிக்கை
சென்னை: 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய 2018-ல் தமிழக அரசு முடிவெடுத்தது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இது சர்ச்சையாகவும் வெடித்தது. ஆளுநரின் இந்த முடிவு எடுக்காத போக்கு விமர்சனங்களையும் உருவாக்கியது.

உச்சநீதிமன்றம் அதிருப்தி
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றமும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது தொடர்பாக அதிருப்தியை வெளியிட்டிருந்தது. ஆளுநர் விரைவாக முடிவு எடுக்கத்தான் வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

சட்டசபையில் 7 தமிழர் பிரச்சனை
இந்நிலையில் சட்டசபையில் இன்று 7 தமிழர் விடுதலை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்று 2018-ல் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என ஆளுநரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

திமுக மீது புகார்
ஆனால் திமுகதான் 7 தமிழர் விடுதலை பிரச்சனையில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புகிறது. 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் அதிமுக அரசு உண்மையாகவே முயற்சித்து வருகிறது. ஆளுநரை சந்திக்கும் போதெல்லாம் இதை வலியுறுத்தி இருக்கிறோம்.

நல்ல முடிவு வரும்
ஆளுநரை கடந்த ஜனவரி 29-ந் தேதி சந்தித்த போதும் கூட இதனை வலியுறுத்தி இருக்கிறேன். விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications