கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
சென்னை: கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் சிரூரில் கடந்த 16ம் தேதி பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சின்னண்ணன்(56), சரவணன்(34), முருகன் உள்ளிட்ட 3 பேர் சிக்கிக்கொண்டனர்.

இவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சின்னண்ணன்(56), முருகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சரவணன் என்ற ஓட்டுநரை மீட்புக்குழுவினர் தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ. 3 லட்சம் நிவாரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவித்திருக்கிறார்.
இது குறித்து விடுக்கப்பட்ட இரங்கல் குறிப்பில், "நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் குறுவட்டம், தாத்தையங்கார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னன்னன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்வட்டம், எம். வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் கடந்த ஜூலை 16 அன்று LPG டேங்கர் லாரியில் ஓட்டுநர்களாக சென்றபோது கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications