சென்னை திரும்புவோர் கவனத்திற்கு... 2 நாட்கள் கழித்து வருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்..!
சென்னை: வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் இரண்டு மூன்று நாட்கள் கழித்து வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கும் சூழலில், அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
இதனால் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு இன்றிரவு சென்னை திரும்ப திட்டமிட்டவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு தங்கள் பயணத்திட்டத்தை ஒத்தி வைத்தால் சிரமங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

குளம் போல்
சென்னையில் ஒரேநாளில் 20 செ.மீ.மழை கொட்டித்தீர்த்ததால் மாநகரின் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைளை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

நேரில் ஆய்வு
மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் இன்று காலை முதல் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முழங்கால் அளவு தண்ணீரில் சிறுதயக்கமின்றி இறங்கி நடந்து சென்ற அவர், எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கும் விசிட் அடித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

முதல்வர் அட்வைஸ்
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 2 தினங்களுக்கு விடுமுறை அறிவித்த அவர், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் தங்கள் பயணத்திட்டத்தை அடுத்த 2 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். முதலமைச்சரின் இந்த வேண்டுகோள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Recommended Video

பயணக் கட்டணம்
இதனால் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு 4 நாட்கள் விடுமுறை முடிந்து இன்றிரவு சென்னை திரும்பவிருப்பவர்கள் அடுத்த 2 நாட்கள் கழித்து சென்றால் சிரமங்களிலிருந்து தப்பிக்க முடியும். பயணக்கட்டணம் வீணாகிவிடும் எனக் கருதி புறப்படாமல் முதலமைச்சரின் வேண்டுகோளை பரிசீலனை செய்தால் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications