ஜாதிவெறி தூண்டும் நாட்டாமை, காணி முறை, ஊர் பஞ்சாயத்து... திராவிட மாடல் ஆட்சியில் தடை செய்யப்படுமா?
சென்னை: ஜாதிவெறியை தூண்டிவிடுகிற, தீண்டாமையை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிற இந்த சமூகத்தின் புற்று நோய் கட்டமைப்புகளாக நாட்டாமை முறை, காணி முறை, ஊர் பஞ்சாயத்து உள்ளிட்டவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தடை செய்யுமா? சட்டவிரோதம் என அறிவிக்குமா? என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தட்டிவிட்டால் பல்லாயிரம் பேருக்கு மெசேஜ் பாஸ் செய்யப்படும் அதிநவீன காலத்தில் தண்டோரா போட்டு அறிவிக்கும் முறை தொடரத்தான் வேண்டுமா? தண்டோரா போடுதல் என்பதை ஒரு ஜாதியினர் மட்டுமே மேற்கொள்கின்றனர்; சாமியோவ்... என அழைக்கும் தண்டோரா முறை என்பது அப்பட்டமாக ஜாதிக் கொடுமையின் உச்சம்- தீண்டாமையின் வெளிப்பாடு என்கிற குரல்கள் அண்மையில் வலிமையாக எழுந்தன. இதற்கு செவிசாய்த்து தண்டோரா முறைக்கே முடிவு கட்டியது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு.
இப்போது ஜாதிவெறி தலைக்காடும் தெக்கத்தி சீமையின் பாஞ்சாங்குளம் கிராமத்து தீண்டாமை தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கி எடுத்துள்ளது. ஆசையாய் மிட்டாய் வாங்க பிஞ்சு பிள்ளைகளிடம், எங்க ஊர் கட்டுப்பாடு.. உங்களுக்கு மட்டும் எதுவும் தரமாட்டோம் என கடைக்காரர் சொல்லுகிற வீடியோ இதயம் இருப்பவர்களின் தூக்கத்தை சாகடித்திருக்கிறது. அந்த பிஞ்சு பிள்ளைகள் என்ன பாடுபட்டிருக்கும்? அதுவும் ஊர் கட்டுப்பாடா? என பிஞ்சு குரல் கேட்கிற கேள்வி சம்மட்டி அடியாக வலிக்கவே செய்யும்.. செய்கிறது.

பாஞ்சாங்குளம் ஒடுக்குமுறை
இந்த வீடியோ, ஊர் பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமையின் ஜாதித் திமிரை மட்டும் சொல்லவில்லை; பாஞ்சாங்குளத்தில் அங்குலம் அங்குலமாக அரங்கேற்றப்பட்ட அத்தனை ஜாதிய ஒடுக்குமுறைகளை நடுவீதியில் நிற்க வைத்திருக்கிறது. வகுப்பறைகளில் இருக்கைகளில் அமர தடை; உணவுக்கு தட்டு தருவதில் தீண்டாமை என வெட்கங்கெட்ட அத்தனை செயல்களையும் பாஞ்சாங்குளத்து ஜாதி மிருகங்கள் நடத்திக் காட்டி கொட்டமடித்துக் கொண்டிருந்திருக்கின்றன.

ஊருக்குள் நுழைய தடை
இப்போது ஊர் பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை உள்ளிட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுவிட்டனர். அத்துடன், சக மனிதனுக்கு ஜாதி என்ற பெயரால் தீண்டாமை எனும் விஷத்தை திணித்த அந்த நாட்டாமை உள்ளிட்டவர்கள் ஊருக்குள்ளே நுழையவும் தடைவிதித்துள்ளது போலீஸ். இந்த செய்தியை கேட்கிற போது இயல்பாகவே சபாஷ் என்கிற பாராட்டு மனசாட்சி உள்ளவர்களிடம் இருந்து வந்து விழும். இந்த பாராட்டுடன் முடிந்துபோய்விடவில்லை பெருமிதம் மிக்க திராவிட மாடல் அரசின் பணி.

எப்போது முழு வீச்சில் தடை?
ஜாதிய கட்டமைப்பை வலுவாக்குகிற, ஜாதிய ஒடுக்குமுறைகளை தீவிரமாக்குகிற, தீண்டாமையை ஒழியவிடாமல் பாதுகாக்கிற ஊர் பஞ்சாயத்து என்கிற சிஸ்டத்தை மிக கடுமையான குற்றமாக அறிவித்து தடை செய்ய வேண்டும். ஊர் பஞ்சாயத்து, கட்டப் பஞ்சாயத்து முறைகளுக்கு எதிரான தடைகளும் சட்டப் பிரிவுகளும் முழு வீச்சில் அமல்படுத்தப்பட வேண்டும். ஊர்ப் பஞ்சாயத்தில் பங்கேற்று இந்த சட்டாம்பிள்ளைத்தனத்தை காட்டுகிற காலிகளுக்கு அரசு பணி, பதவி எதுவும் இல்லை என்கிற அறிவிப்பு வெளியாக வேண்டும்.

இத்தனையையும் தடை செய்வோம்
அதேபோல் ஊர்ப் பஞ்சாயத்துகள் இன்னமும் ஜாதிய ஒடுக்குமுறையை தீண்டாமையை வேராக வைத்திருக்கும் காணி என்கிற முறையையும் சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும். ஒரு ஜாதியினரின் நல்லது கெட்டது நிகழ்வுகளில் வண்ணார் சமூகத்தின் இந்த நபர்தான் காணிக்காரர்; நாவிதர் சமூகத்தின் இந்த நபர்தான் காணிக்காரர்; உறுமி அடிப்பவரில் இந்த நபர்தான் காணிக்காரர்; பறை அடிப்பவரில் இந்த நபர்தான் காணிக்காரர்; பிணம் எரிப்பவரில் இந்த நபர்தான் காணிக்காரர் என்கிற ஜாதிய கட்டமைப்பின் ஆணிவேரை அறுத்து எறிய வேண்டிய கடமையும் முதல்வர் மு9.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு இருக்கிறது. ஜாதிய ஒழிப்பு என்பது அத்தனை சுலபமானது அல்ல. ஆனால் அதை நோக்கிய ஒவ்வொரு அடியும் ஆகப் பெரும் வரலாற்று கடமை என்பதை திராவிட மாடல் அரசு புரிந்து கொள்ளுதலே அனைவரது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications