உங்க முதல்வரே "காவிரி டெல்டா"தானே... ஒரே டிவிட்டில்.. சர்ச்சையை "ஆஃப்" செய்த ஸ்டாலின்
சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்ற சலசலப்பு நீடித்த நிலையில், ஸ்டாலினின் ஒற்றை ட்வீட், டெல்டா பகுதி மக்களை மனம் குளிரச் செய்திருக்கிறது.
பல்வேறு இன்னல்கள், அவதூறுகள், அவமானங்கள், கேலி, கிண்டல் தாண்டி அதிகாரப்பூர்வமாக இன்று தமிழக முதல்வர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவரது 33 அமைச்சர்களும் இன்று பதவியேற்று தங்கள் பணிகளை துவக்கியிருக்கின்றனர்.
தமிழகத்துக்கு சேவை செய்ய.. வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!
ஆனால், அமைச்சர்கள் பட்டியலில் இருந்த மிக முக்கியமான அதிருப்தி, வருத்தம், டெல்டா பகுதியில் இருந்து ஒருவர் கூட அமைச்சராகவில்லை என்பதே.
15-ல் வெற்றி
ஆம்! காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் ஒருவருக்கு கூட அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இது டெல்டா பகுதி திமுகவினர் மத்தியில் சற்று கடுமையாகவே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 7இல் திமுகவும், திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில் மூன்றிலும், நாகை மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 தொகுதிகளில் இரண்டிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 தொகுதிகளில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. புரியும்படி சொல்ல வேண்டுமெனில், டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளைத் திமுக கைப்பற்றியிருக்கிறது.
மிஞ்சிய ஏமாற்றம்
இதன் எதிரொலியாக, புதிய அமைச்சரவையில் திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் சாக்கோட்டை க.அன்பழகன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் பூண்டி எஸ்.கலைவாணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெறக்கூடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 டெல்டா எம்எல்ஏக்களில் ஒருவருக்கு கூட அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 2006-ன் போது திமுக ஆட்சியில் கும்பகோணம் கோசி.மணி, திருவாரூர் உ.மதிவாணன் ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.
காப்பாற்றிய டெல்டா
2011-ல் தமிழகத்தில் பலத்த அடி வாங்கிய திமுக, வெறும் 23 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே பெற்றது. அப்போது கூட, திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று, டெல்டாவை திமுகவின் வலிமைமிக்க பகுதியாக வைத்திருந்தனர். ஆனால், இத்தனை சாதகங்கள் இருந்தும், இம்முறை ஒருவருக்கு கூட வாய்ப்பு கிடைக்காமல் போக, உள்ளூர் திமுகவினர் மட்டுமின்றி, பேஸ்புக்கில் அரசியல் பேசும் டெல்டாவின் இளசுகள் முதல் பெருசுகள் வரை அதிருப்தி மெசேஜ்களை டைம்லைனில் காணமுடிந்தது.
மாபெரும் வாய்ப்பு
இந்த நிலையில் தான் நிலைமையை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி போல சாணக்கியத் தன ஸ்டெப் ஒன்றை எடுத்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்!. காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
ஐஸ் மலை வைத்த முதல்வர்
அதாவது, டெல்டாவைச் சார்ந்த மினிஸ்டர்கள் இல்லை என்று ஏன் வருத்தம் கொள்கிறீர்.. பெரும்பான்மையோடு வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சரான இந்த மு.க.ஸ்டாலினே டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் தான் என்று சொல்லாமல் சொல்லி, கலைஞரை விட ஒருபடி பாய்ந்து டெல்டா பகுதி மக்களின் தலையில் ஐஸ் மலையையே கொண்டு வைத்துவிட்டார். இனி அது உருக குறைந்தது ஐந்தாண்டு காலமாவது ஆகும்!