திட்டங்கள் நிறைவேற்ற கால அவகாசம் தேவை.. சிங்கப்பூர் போல் சென்னையை மாற்றுவோம்.. சேகர்பாபு பேட்டி!
சிங்கப்பூரை போல் சென்னையை முதல்வர் ஸ்டாலின் மாற்றுக் காட்டுவார் என்று சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: சிங்கப்பூர் போல் சென்னையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றிக் காட்டுவார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதேபோல் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்த திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு போதுமான கால அவகாசம் தேவை என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, காய்ச்சல் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இதனால் கொசுக்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அந்த வகையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை கொசுக்களை அடியோடு ஒழிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து
கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகக்கூடிய குப்பை கிடங்குகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்டவற்றில் ட்ரோன் இயந்திரங்களை மூலம் கொசு மருந்து தெளித்து கொசுக்களை ஒழிப்பதற்கான முன்னெடுப்பை சென்னை மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. சென்னை ஓட்டேரியில் உள்ள நல்லா கால்வாயில் புதிய முயற்சியை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் தொடங்கி வைத்தார்.

விரிவுப்படுத்தப்பட வாய்ப்பு
சென்னையில் ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டால், அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதும் திட்டம் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மனிதர்களால் செல்ல முடியாத இடத்திற்கு கூட, ட்ரோன் இயந்திரங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

சேகர்பாபு பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், சென்னையில் 28 கால்வாய்கள் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி முழுமையாக தூர்வாரப்பட்டதால் மட்டுமே பெய்த மழைக்கு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னை முழுவதும் கால்வாய்களை தூர்வார ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கொசஸ்தலை ஆற்றில் 677 கிலோ மீட்டர் தூர் வார முடிவு செய்யப்பட்டு இதுவரை 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.331 கோடி செலவில் பணி நடைபெற்றுள்ளது.

சிங்கப்பூர் போல் மாற்றுவோம்
எந்த திட்டமும் உடனடியாக நிறைவேறிவிடாது. ஜீ, பூம், பா என்ற மந்திர வார்த்தை சொன்ன உடனே சென்னை, சிங்கப்பூர் போல் மாறிவிடாது. இரண்டு ஆண்டுகள் என்பது போதிய காலகட்டம் அல்ல. நிச்சயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதைச் செய்வார். சென்னையை சிங்கப்பூர் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றிக் காட்டுவார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications