ஸ்டாலின் தந்த புது "அசைன்மென்ட்".. ரெடியாகும் "ஸ்டிரிக்ட்" அதிகாரி.. கலக்கத்தில் அதிமுக, பாஜக!
அறநிலையத் துறைக்கு மற்றொரு உத்தரவு பிறப்பித்துள்ளார் முக ஸ்டாலின்
சென்னை: சாட்டையை வேகமாக சுழட்ட தொடங்கி உள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.. அதன்படி, அறநிலைய துறைக்கு ஒரு புது உத்தரவு பறந்துள்ளதாம்.. இதற்காகவே அந்த "ஸ்டிரிக்ட்" அதிகாரியிடம் அசைன்மென்ட்டும் தரப்பட்டுள்ளதாம்.. இதையடுத்து அதிமுக, பாஜக தரப்பு கலங்கி போயுள்ளதாக செய்திகள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன..
கட்சி விட்டு கட்சி தாவி வந்தால், அவர்களுக்கு உடனே பெரிய அளவிலான சீட், பதவிகளை தருவது சமீப காலமாக நடந்து வருகிறது.. இப்படி ஒரு பழக்கத்தை துவக்கி வைத்ததே தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும்தான்.. இந்த பழக்கம் திமுகவிலும் ஒட்டிக் கொண்டது..!
அந்த வகையில் யார் வந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு, சீட், பதவிகளை தந்து வருகிறது திமுக தலைமையும்.. அதில் ஒருவர்தான் சேகர்பாபு..!

சேகர்பாபு
சீனியர்.. அதிமுகவில் இருந்தபோதும் சரி, திமுகவில் இருந்த போதும் சரி, எந்த கட்சியில் இருந்தாலும், தொகுதியில் இவருக்கென்று தனி விசுவாசிகள் உண்டு... அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பி.கே.சேகர் பாபு. அதிமுக-வின் அவைத் தலைவரான மதுசூதனனின் உறவினர் என்பதிலிருந்தே சேகர்பாபுவின் அதிரடி அரசியல் எப்படியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

வடசென்னை
ஒருகாலத்தில் அதிமுகவின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர்... பொது இடங்களில் ஜெயலலிதா இவரை பெயர் சொல்லியே கூப்பிடுவார்.. அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். அதனால்தான், திமுகவில் இவர் இணைந்தபிறகும், களப்பணி, கட்சி பணி என ஒன்றையும் விடாமல் சுழன்று வேலை பார்ப்பவர்.. ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், டக்கென ஸ்டாலினுக்கே போனை போட்டு பேசுவார்..

அசால்ட்
தொகுதிப் பிரச்னைகளை அசால்ட்டாக தீர்த்து வைப்பார்.. அதிகாரிகளை நாசூக்காக வேலை வாங்கும் திறமைசாலி.. இப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பை ஸ்டாலின் தந்துள்ளார். "கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், இது தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள, அதற்கு சேகர்பாபுதான் சரியான நபர் என்ற எண்ணத்திலேயே இந்த பொறுப்பு அவருக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா
இந்த பொறுப்பை ஏற்றதில் இருந்தே அதிரடியை கையில் எடுத்துள்ளார் சேகர்பாபு.. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் முனைப்பு காட்டி வருகிறார்.. இன்னொரு பக்கம், அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட வேலைகளிலும் இறங்கி உள்ளார்.. "அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று சேகர்பாபு முதல் உத்தரவை போட்டதுமே கோவை "ஆன்மீக பகுதி"யில் ஒரு நடுக்கம் வந்தது..

ஜக்கி
அடுத்த செகண்டே, ஈஷா அமைப்பின் ஜக்கி வாசுதேவ் "அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் - சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது" என்று ட்வீட் போட்டிருந்தார்.. மற்றவர்கள் எல்லாம் சும்மா இருக்கும்போது, இவர் மட்டும் ஏன் வந்து ட்விட் போடுகிறார் என்ற சந்தேகமும் எழுந்தது. அந்த வகையில் இன்னொரு அதிரடியையும் இப்போது அறநிலையத்துறை கையில் எடுத்துள்ளது.

நிதி ஆதாரம்
அறநிலையத்துறையின் ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் குமரகுருபரன் ஐஏஎஸ்ஸிடம், கோயில் சொத்துகளை மீட்டு வருவாயை உயர்த்த வேண்டும் என்கிற பொறுப்பை திமுக தலைமை ஒப்படைத்திருக்கிறதாம்.. இந்து அறநிலையத்துறையில் நிதி ஆதாரத்தை அதிகரிக்கவே இப்படி திட்டம் என்று சொல்லப்படுகிறது..

பாஜக
இப்படித் திரட்டப்படும் நிதியை கொண்டு, தமிழகத்தின் 4 முக்கிய ஆன்மிகத் தலங்களில் இந்து அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகளும், பெரிய கோயில்களில் திருமண மண்டபங்களும் கட்டும் திட்டங்களும் இருக்கிறதாம்.. இந்த பணியில்தான் சேகர்பாபு & கோ களமிறங்கி உள்ளது.. இதையடுத்து, கூடிய சீக்கிரம், இந்த துறையில் நடந்த முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள்.. இதனால் அதிமுக தரப்பு மட்டுமல்ல, பாஜகவுக்கு ஆதரவான சிலரும் நடுநடுங்கி போயுள்ளார்களாம்..!












Click it and Unblock the Notifications