கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல்வர் - 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட வலியுறுத்தல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சென்னை அரசு மருத்துவமனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் வரிசையாக கொரோனா தடுப்பூசியை செலுத்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. தமிழகத்தில் 2,682 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 11.25லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறிய முதல்வர் கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத கிருமியை எதிர்த்து இப்போது போராடி வருகிறோம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தனி மனித இடைவெளியுடன் பழக வேண்டும். கைகளையும், வீடுகளையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications