நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது.. ஸ்டாலின் சரமாரி தாக்கு!
சென்னை: நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் - பாஜக மாநாடுகளில் காட்சிப் பொருளாக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.கவினருக்கு நீட் முறைகேட்டை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

2025 யுஜி நீட் தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் அளித்த குற்றச்சாட்டில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், மருத்துவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நீட் தேர்வு முறைகேட்டில் இருவரை சிபிஐ கைது செய்தது குறித்த செய்தியை மேற்கோள் காட்டி, எக்ஸ் தளத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. அதனால்தான் நாங்கள் NEET தேர்வு Neat ஆனது அல்ல என்று சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம். அதற்கான எல்லா காரணங்களும் எங்களிடம் உள்ளன.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்!
RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!" எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications