திருவள்ளூரில் பலியான மாணவருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்.. அரசு உயிரோடு விளையாடுகிறது.. எடப்பாடி கண்டனம்
சென்னை: திருவள்ளூர் அருகே உள்ள கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியின் நடைமேடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் மோகித் உயிரிழந்துள்ளார். பலியான மாணவரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இச்சம்பவத்துக்கு, பாழடைந்த அரசுப் பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது ஸ்டாலின் மாடல் திமுக அரசு என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே உள்ள கொண்டாபுரம் அரசு பள்ளியின் நடைமேடையில் அமர்ந்து 7 ஆம் வகுப்பு மாணவர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் மோகித் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோஹித் (வயது 12) என்ற மாணவர் இன்று (16.12.2025) மதியம் 1.00 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப் பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?. பாழடைந்த அரசுப் பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு பொம்மை முதல்வர் ஸ்டாலின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications