வடமாநிலத்தவர்களுக்கு செக் வைத்த முதல்வர் ஸ்டாலின்! தவறு செய்தவர்கள் தப்ப முடியாது! சட்டசபையில் உறுதி
சென்னை: தமிழ்நாட்டில் தங்கிப் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் உறுதியளித்துள்ளார்.
மேலும், வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு காவல் நிலையமும் சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய முதல்வர் இதனைக் கூறினார். அது தொடர்பான விவரம் வருமாறு;

வேல்முருகன் பேச்சு
மாண்புமிகு உறுப்பினர் சகோதரர் திரு. வேல்முருகன் அவர்கள் நேற்று பேசும்போது, தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் குற்றச் சம்பங்களில் ஈடுபடுவது பற்றி விளக்கமாக, விரிவாக, உணர்ச்சியோடு குறிப்பிட்டு பேசினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள்மீது 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் பதில்
இவற்றில் கொலை வழக்குகள் 25; அவற்றில் 24 வழக்குகளில் 33 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தவிர, தமிழ்நாட்டில் தங்கிப் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு காவல் நிலையமும் சேகரிக்கின்றது. அவர்களை தமிழ்நாட்டில் பணியில் அமர்த்தும் மனித வள நிறுவனங்களிடமிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன.

வட மாநிலத்தவர்கள்
வட மாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், சந்தேகத்திற்குரியோரை அடையாளம் கண்டு, அந்தந்த மாநிலங்களின் போலீசாரிடமிருந்தும் அவர்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் உதவிகள் பெற்று மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார் என்றாலும், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடும் நடவடிக்கை
அதேபோல், வட மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் சட்ட விரோத செயல்களில், குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications