தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் அன்று என்னை கைது செய்தார்! ஃபிளாஷ்பேக் கூறிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இல்ல மணவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று சென்னையில் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது பல சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக் தகவல்களை முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் பகிர்ந்துகொண்டார்.
சுமதி என்ற பெயர் தமிழச்சி என எப்படி மாறியது என்பது குறித்தும், அதிமுக ஆட்சியில் தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் தன்னை கைது செய்தது பற்றியும் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருமண விழா
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகளுக்கும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் மகனுக்கும் சென்னையில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவில் இளைஞரணி என்று புதிய அணியை உருவாக்குவது குறித்தும் யாரை பொறுப்பாளராக நியமிக்கலாம் என்பது பற்றியும் அப்போதைய மாவட்டச் செயலாளர்களிடம் கருணாநிதி ஆலோசனை நடத்திய போது, ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியன் என பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார் ஸ்டாலின்.

இளைஞரணி மாநாடு
மேலும், 2007-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் போது மாநாடு கொடியை ஏற்ற யாரை அழைக்கலாம் என கருணாநிதியிடம் தாம் ஆலோசித்த போது, அவர் தங்கபாண்டியன் மகள் சுமதியை அழைக்குமாறு கூறினார். அதன்படி கல்லூரி பேராசிரியராக இருந்த சுமதியிடம், மாநாட்டு கொடியை ஏற்ற சம்மதமா என்றும், இதனால் கல்லூரி பணிக்கு இடர்பாடு ஏதும் ஏற்படாதா எனவும் தாம் வினவியதாகவும் எதைப்பற்றியும் கவலையில்லை எனக் கூறிவிட்டு திமுக இளைஞரணி மாநாட்டு கொடியை ஏற்றி வைக்க அவர் வருகை தந்தார் என ஸ்டாலின் தெரிவித்தார்.

பெயர் மாற்றம்
சுமதி என்று இருந்த பெயரை கலைஞர் தான் தமிழச்சி என மாற்றியதாகவும் தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பெயரில் இளைஞரணி மாநாட்டு விளம்பரத்தை கொடுக்குமாறும் கலைஞர் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். இதனிடையே அதிமுக ஆட்சிக்காலத்தில் 2001-2006 காலகட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் திமுக கொடியேற்ற தாம் சென்ற போது, அதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதனை மீறிச் சென்று கொடியேற்றி வைத்ததாக கூறிய ஸ்டாலின், அதற்காக அப்போது தன்னை கைது செய்தவர் தான் தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் (சந்திரசேகருக்கு அப்போது நாமக்கல் மாவட்டத்தில் பணி) என பிளாஷ்பேக் தகவலை பகிர்ந்தார்.

திமுகவுக்கு வெற்றி
மேலும், இனி வரும் நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக தான் வெற்றிபெறும் என்றும் இதில் யாருக்கும் எள்முனை அளவுகூட சந்தேகமே வேண்டாம் எனவும் ஸ்டாலின் பேசினார். இந்த விழாவில் ப.சிதம்பரம், சுப்ரியா சுலே, முத்தரசன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications