நீட் விலக்கு அளித்தால்தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா? எடப்பாடிக்கு சவால் விட்ட ஸ்டாலின்
சென்னை: "நீட் விலக்கு அளித்தால் தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியும் என எடப்பாடி பழனிசாமியால் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
2026 சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக - பாஜக இடையே கூட்டணி பேச்சுகள் தொடங்கி உள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே இதனை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், எடப்பாடி பழனிசாமி, கூட்டணி பற்றி பேசவில்லை என மறுத்தார். எனினும், அதிமுக தலைவர்கள் பாஜக மேலிட தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி மக்கள் நீண்ட காலமாக அரசு மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப உதகை அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் 499 கோடி நிதி ஒதுக்கபட்டு முதற்கட்டமாக அரசு மருத்துவ கல்லூரி 2022-ஆம் ஆண்டு திறக்கபட்ட நிலையில் 143 கோடி மதிப்பில் மருத்துவமனை, 200 கோடி மதிப்பில் மருத்துவமனை பணியாளர்களுக்கான குடியிருப்புகள், 10 கோடி மதிப்பிலான உபகரணங்கள் என மொத்தம் 353 கோடி மதிப்பில் மருத்துவ கல்லூரிக்கான மருத்துவமனை கட்டி முடிக்கபட்டுள்ளது. அதனை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு சவால்
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், "நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தமிழகத்திற்குள் நுழைந்தது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தான் நீட் தேர்வை அனுமதித்தனர். கூட்டணியில் இருந்தபோதும், தேர்தலைச் சந்தித்த போதும், அப்போது நீட் தேர்வு விலக்கு வேண்டும் என ஏன் பாஜகவிடம் கேட்கவில்லை. ராகுல்காந்தி மூலமாக, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என நாங்கள் சொல்ல வைத்தோம். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா?" என ஈபிஎஸ்க்கு, முதலமைச்சர் சவால் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும்
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உதகை விழாவில் பங்கேற்பதால் ராமேஸ்வரம் பாம்பனில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பும் விழாவிற்கு செல்லவில்லை. பிரதமர் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழக மண்ணில் இருந்து பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும். இந்தி திணிப்பு மற்றும் சிறப்பு நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. வக்பு திருத்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி அவர்களே.. தமிழ்நாட்டு மண்ணில் நின்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் வாக்குறுதி அளிக்க வேண்டும்.
வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக வழக்கு
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். பொருளாதார வளர்ச்சியில் டாப் கியரில் தமிழ்நாடு செல்கிறது. பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உயர்க்கல்வி சேர்க்கை விகித்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications