தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! கட்சி வித்தியாசம் பாராமல் துணை நில்லுங்கள்! ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை: தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு கட்சி வித்தியாசம் பாராமல் துணை நிற்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்த அவர், தமிழகத்திற்கு திமுக ஆட்சியில் எவ்வெப்போது என்னென்ன தொகைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்ற விவரத்தையும் போடப்பட்ட புரிந்துணர்வு விவரங்களையும் தெரியப்படுத்தினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

110 விதியின் கீழ்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை, குறிப்பாக தொழில் முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த ஓர் அறிக்கையினை தங்களுடைய அனுமதியோடு இந்த அவையிலே எடுத்து வைக்க விரும்புகின்றேன். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடும், 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

முதல் முகவரி
20.7.2021 அன்று சென்னையில் "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி வாயிலாக 17,141 கோடி ரூபாய் முதலீடும், 55,054 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 22.9.2021 அன்று சென்னையில் "ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி வாயிலாக 1880 கோடி ரூபாய் முதலீடும், 39,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
23.11.2021 அன்று கோயம்புத்தூரில் "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி வாயிலாக 35,208 கோடி ரூபாய் முதலீடும், 76,795 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 7.3.2022 அன்று தூத்துக்குடியில் "சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவின் போது" 4,488 கோடி ரூபாய் முதலீடும், 15,103 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. (மேசையைத் தட்டும் ஒலி)

புள்ளி விவரங்கள்
இதுதவிர, 11.9.2021 மற்றும் 15.3.2022 அன்று நடைபெற்ற நிகழ்வுகளில் 3,558 கோடி ரூபாய் முதலீடும், 4,600 பேர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கும் வகையில் DP World மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 26.3.2022 மற்றும் 28.3.2022 ஆகிய நாட்களில் துபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

25 மாவட்டங்களில்
"சீரான மற்றும் பரவலான தொழில் வளர்ச்சி" எங்கள் தேர்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்றும் வகையில் இன்றைக்கு- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
இந்த அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இனிமேல் போடப்போகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதலீடுகளாக, வேலைவாய்ப்புகளாக மாறும். தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை அதிகரிக்கவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இந்த அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் கட்சி வித்தியாசம் பாராமல் துணை நிற்க வேண்டும் என்பதை மட்டும் கேட்டு, அதேபோல், என் பயணத்திற்கு வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து அமைகிறேன்.












Click it and Unblock the Notifications