அதிமுகவினர் வெளிநடப்பு... ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல் உள்ளது...ஸ்டாலின் விமர்சனம்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். பேரவைக்கு வெளியே அமர்ந்து தர்ணா செய்த உறுப்பினர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்
சென்னை: மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். அதிமுகவினர் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொடநாடு கொலை,கொள்ளை வழக்கினை மீண்டும் விசாரிப்பதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் இரண்டு நாட்கள் பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதில் தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் சட்டசபையில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் தொடங்கியது.
அதிமுக உறுப்பினர்கள் சட்டசபைக்கு வரும்போதே கறுப்பு பேட்ச் அணிந்து வந்தனர். சட்டசபையில் இன்று கொடநாடு வழக்கு விவகாரம் புயலைக்கிளப்பியது. கொடநாடு எஸ்டேட் விவகாரம் குறித்து கூச்சலிட்ட அதிமுகவினர் பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம்' என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
இதுகுறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பேச அனுமதி கொடுத்தேன்; ஆனால் அனுமதியில்லாமல் பதாகைகளை ஏந்தி வந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர்களை வெளியேற்ற வேண்டும் உத்தரவிட்டார்.

ஸ்டாலின் விளக்கம்
சட்டசபையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைப் பற்றி விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் ஆட்சி கண்டிப்பாக நடக்கும் என்று கூறினார். இந்த வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. அதனால் யாரும் பயப்படத்தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எங்க அப்பன் குதருக்குள் இல்லை
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி கொடநாடு வழக்கு குறித்து விசாரிக்கப்படுகிறது என்றார். தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே விசாரணை நடைபெறுகிறது. உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். அதிமுகவினர் எங்க அப்பன் குதருக்குள் இல்லை என்பது போல செயல்படுகின்றனர் கூறிய உடன் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

அரசுக்கு எதிராக முழக்கம்
சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள் பேரவையின் வாசலில் அமர்ந்து திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். போடாதே போடாதே பொய் வழக்குப் போடதே என்று முழக்கமிட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை எதிர்கட்சித்தலைவருமான ஓ.பன்னீர் செல்வம், மக்கள் மீது அக்கறை செலுத்தாமல் எதிர்கட்சியினர் பொய் வழக்கு போட்டு பழிவாங்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

திசை திருப்பல்
சட்டசபை தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பும் வகையில் கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். எதிர்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக அரசு செயல்படுகிறது என்று கூறிய ஓபிஎஸ், கொடநாடு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நாட்கள் சட்டசபையை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

கொடநாடு கொலை மீண்டும் விஸ்வரூபம்
பத்தாண்டு கால அதிமுக ஆட்சி முடிந்து கடந்த மே மாதம் முதல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மாஜி அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்து பரபரப்பை கிளப்பி வருகிறது. வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதால் யார் யார் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications