பொய்யை பரப்பும் முன்னாள் போலீஸ் உயரதிகாரி.. வழக்கு போட்டாச்சாம்! முதல்வர் ஸ்டாலின் சொன்னது இவரைதானா?
சென்னை: தன்னைப் பற்றி பொய்யான தகவல்களை வாட்ஸ் அப்பில் பரப்பும் ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரி மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மக்களை குழப்பி வருகின்றனர். தேவையற்ற பிரச்சாரங்களை, பொய் செய்திகளை ஊடகம் மூலம் மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்திகளை பரப்பி வருகிறார், திமுக அரசு கோயில்களை கொள்ளை அடித்து கொண்டிருப்பதாக பேசி இருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் இந்த கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். இதுவரை ரூ.5500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக மாடல் ஆட்சியில் தான் மீட்கப்பட்டு இருக்கிறது. நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார். உண்மையான பக்தியுடன் இருந்தால் திமுக ஆட்சியை பாராட்ட வேண்டும். திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்துவதற்காக திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருகின்றனர்" என குற்றம்சாட்டினார்.
பொய்யை பரப்பும் முன்னாள் உயரதிகாரி: மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் பொய்யைப் பரப்பி வருவதாக தெரிவித்தார். "ஒரு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி தான் இருக்கும் வாட்ஸ்-அப் குழுவில் ஒரு செய்தியை பரப்பி கொண்டிருக்கிறார். அதில், இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். அந்த ஓட்டுகள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம். அப்படி நான் சொன்னதாக என்னுடைய பெயரை போட்டு ஓய்வு பெற்ற மிகப்பெரிய பொறுப்பில் இருந்த போலீஸ் அதிகாரி பதிவிட்டிருக்கிறார். அவரின் பெயரை இங்கு சொல்ல விரும்பவில்லை. அவர் மீது வழக்கு போட்டுள்ளோம். இன்று செய்தி வரும்.

வழக்கு: இப்படி எல்லாம் திட்டமிட்டு திமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். வளர்ந்து வரும் திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த வேண்டுமென கங்கணம்கட்டி வருகின்றனர். இதையெல்லாம் முறியடிக்கும் வகையில் வரும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் முடிவெடுக்க வேண்டும், பொய்களைப் பரப்புபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பேச்சில் குறிப்பிட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி நட்ராஜ் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற நட்ராஜ், பின்னர் அதிமுகவில் இணைந்து, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் செயல்பட்டார். அவர், வாட்ஸ் அப்பில், திமுக குறித்து அவதூறுகளைப் பரப்பி வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே புகார் எழுந்தது. இந்நிலையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications