மாதம் மாதம் போன "கப்பம்".. ஸ்டாலினிடம் சிக்கிய கருப்பு ஆடுகள்.. பெரிய நெட்வொர்க்கே இயங்கி இருக்கு!
சென்னை; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தமிழ்நாடு அரசை நிலைகுலைய வைத்துள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் கடந்த 2022-ல் ஏற்பட்ட கலவரம் திமுக அரசின் நிர்வாகத்துக்கு எதிராக விமர்சனங்களை கொடுத்தது. உண்மைத் தகவல்களை அரசில் உள்ளவர்களும், அதிகாரிகளும் மூடி மறைத்ததாக அப்போது குற்றச் சாட்டுகள் எதிரொலித்தன.
அந்த சமயத்தில் அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நம்பவில்லை. ஆனால், தற்போது கள்ளச்சாராய மரணத்திற்கு காரணமான பல சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டதாக ஸ்டாலினுக்கு கிடைக்கும் தகவல்களை அவர் நம்பத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்; கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அதிர்ச்சி அளித்த மரணம்: கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 50 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஸ்டாலினுக்கு தகவல்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தமிழ்நாடு அரசை நிலைகுலைய வைத்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் சென்றுள்ளதாம்.
அதன்படி, மாவட்ட கலெக்டருக்கு கீழுள்ள வருவாய்த் துறை அதிகாரிகளான தாசில்தார், ஆர்.ஐ., வி.இ.ஓ. உள்ளிட்டவர்களும் இந்த கள்ளசாராயம் தடையின்றி காய்ச்சவும், சப்ளை ஆவதிலும் உடந்தையாக இருந்துள்ளனர்.
மாதா மாதம் கப்பம் செலுத்தபட்டு வந்திருக்கிறது. கள்ளசாராயம் அமோகமாக விற்பனை யாவதற்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை ? என்றும், மாவட்ட எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்யும் நிர்வாகம், மாவட்ட கலெக்டரை மட்டும் சஸ்பெண்ட் செய்யாமல் இடமாற்றம் செய்யப்பட்டது ஏன்? கலெக்டரான ஐ.ஏ.எஸ். அதிகாரியை, கோட்டையில் உள்ள அரசு செக்ரட்டரிகளாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொழில் ரீதியாக காப்பாற்றுகிறார்களா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.
நடவடிக்கை இல்லாத கமிஷன்கள்; இப்படித்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன் அறிக்கையில் மாவட்ட கலெக்டர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்த நிலையில், கலெக்டர் மீது மேலதிக நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை. அதேபோலத்தான், ஜெயலலிதா மரணத்திற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிசனும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியது. அவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை.
ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்றால் உடனடியாக நடவடிக்கை பாய்ந்து விடுகிறது என்றும் கோட்டையில் பேச்சுக்கள் எதிரொலிக்கின்றன. இப்போது ஏதாவது கமிஷன் அமைத்தாலும் அதில் நடவடிக்கை இருக்குமா என்ற கேள்வி உள்ளது.
இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார் ? என்கிற விவாதம் அரசியல் விமர்சகர்களிடம் எதிரொலிக்கச் செய்கிறது.












Click it and Unblock the Notifications