சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்.. “லேட்டரல் எண்ட்ரி” முறைக்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
சென்னை: மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனங்கள், சமூக நீதி மீதான நேரடி தாக்குதல் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு உயர் பதவி பணிகளில் 45 இணை செயலர், இயக்குநர்கள், துணை செயலர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்க மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. ஐ.ஏ.எஸ் போன்ற மத்திய சேவை அதிகாரிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்த இந்த பதவிகளுக்கு தற்போது நேரடி நியமனம் மூலம் தேர்வு நடைபெற உள்ளதாக வெளியான அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு துறைகளின் உயர் பதவிகளில் இப்படி நேரடியான நியமனங்கள் நடந்தால், இன்றைய அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உயர் பதவிகளை அடைவதற்கான வழி மூடப்பட்டுவிடும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கிய பதவிகளில் நேரடி சேர்க்கை மூலம் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதால், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு பறிக்கப்படுகிறது என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சமூகநீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும். லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். தகுதிமிக்க பட்டியல் - பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பது ஆகும்.
மத்திய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நியாயமான, சமத்துவமான முறையில் பதவிஉயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும். தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற 'க்ரீமி லேயர்' முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட, நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications