RSS அஜென்டாவுடன் இல்லம் தேடி கல்வி திட்டம்? அமைச்சரை அவசரமாக அழைத்த ஸ்டாலின்! அடுத்து என்ன?
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் பள்ளிக்கல்வியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைமுக அஜென்டாவை செயல்படுத்துவதே இல்லம் தேடி கல்வித் திட்டம் என்கிற தோழமை கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை அவசரமாக அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video
சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்துள்ளார். அத்துடன் திராவிட அரசின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று தான் இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் திமுக கூட்டணி மற்றும் தோழமை கட்சிகள் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை வேறு மாதிரி பார்க்கின்றன. காலை எட்டு மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத எதை இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் கற்றுக் கொடுக்கப்போகிறது என திக கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க தேர்வு செய்யப்படுபவர்கள் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் திக எச்சரித்தது. அதிலும் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பு ஒன்று தான் நாடு முழுவதும் இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ஆசிரியர்களை சப்ளை செய்யும் அமைப்பாக உள்ளது என்றும் திக சுட்டிக்காட்டியிருந்தது. மேலும் இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை சுட்டிக்காட்டி தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு வடிவம் தான் இந்த இல்லம் தேடி கல்வித்திட்டம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளும் கூட தாங்கள் கற்றுக் கொடுக்காத எதை இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் கற்றுக் கொடுக்கப்போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி திட்டத்தை துவக்கிய மறுநாளே அதனை மையமாக வைத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
கல்வியில் புரட்சியை ஏற்படுத்தப்போகும் இல்லம் தேடி கல்வி திட்டம் - அன்பில் மகேஷை பாராட்டிய முதல்வர்
இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை அவசரமாக அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக கூறுகிறார்கள். இந்த ஆலோசனையின் போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவும் உடன் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆலோசனையின் போது, இல்லம் தேடி கல்வித் திட்டத்தை ஏன் ஆர்எஸ்எஸ் அஜென்டா என திகவும், இடதுசாரிக்கட்சிகளின் மாணவர் அமைப்புகளும் விமர்சிப்பது ஏன் என்று முதல்வர் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
திட்டம் தொடங்கிய மறுநாளே அது குறித்து முதலமைச்சர் அழைத்து விளக்கம் கேட்டுள்ளதால் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பான சர்ச்சை அதிகமாகியுள்ளது. மேலும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.