சபாஷ்..! களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை திடீர் ஆய்வு
சென்னை: வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்கொள்ள நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்
தலைநகர் சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பின் நிலை மோசமாகவே உள்ளது. கொஞ்ச நேரம் மழை பெய்தாலே நகரில் முக்கிய சாலைகளிலும் கூட மழை நீர் தேங்கிவிடும். முக்கிய சாலைகளின் நிலையே இப்படி என்றால் தாழ்வான பகுதிகளைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை.
இதனால், பாதசாரிகள் தொடங்கி வாகன ஓட்டிகள் வரை அனைவரும் பெரும் சிரமத்தை எதிர்கொள்வது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது.
வெங்கடாச்சலம் வீட்டில் சிக்கிய 15 கிலோ சந்தன மரப்பொருட்கள் பறிமுதல்.. வனத்துறையில் ஒப்படைப்பு
சென்னையின் நிலை
குறிப்பாகக் கடந்த 2015 பெருவெள்ளம், அதன் பின்னர் வர்தா உள்ளிட்ட புயல் சமயங்களில் தலைநகர் சென்னை பட்ட சிரமத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. வழக்கமாகப் பெய்வதைக் காட்டிலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாகப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி துரிதமாக ஈடுபட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள்
ஏற்கனவே கடந்த செப். 20ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 895.31 கி.மீ. நீளமுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால்களைத் தூர்வாருதல், சிறு பழுதுகளைச் சரி செய்வது ஆகிய பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 4254 மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல், 948 மழைநீர் வடிகால்களில் சிறு பழுதுகளைச் சரிபார்த்துப் பராமரித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், உடைந்த நிலையில் உள்ள 6891 மழைநீர் வடிகால்களின் மூடிகளை மாற்றும் பணிகளிலும் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
முதல்வர் ஆய்வு
இந்தச் சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாகச் சென்னையில் நடைபெறும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். சென்னை, காந்தி மண்டபம் சாலையில், கால்வாய்களில் சேர்ந்துள்ள வண்டல்களை நவீன ஹைட்ராலிக் மற்றும் அதிக உறிஞ்சும் திறன் மற்றும் ஜெட்டிங் வசதி கொண்ட இயந்திரம் மூலம் அகற்றும் பணியினை முதல்வர் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே மழைக் காலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட 9 இடங்களிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். வேளச்சேரி ஏரி உட்பட நகரிலுள்ள முக்கிய ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றும் பணிகளும் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை தவிர பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியிலும் ஆய்வு செய்யும் முதல்வர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
Recommended Video
முக்கிய ஏரிகள்
கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு மழைக் காலம் தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாகவே மழை பெய்துள்ளது. இதனால் நகரின் நீர் அதாரமாக இருக்கும் சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு கண்டிப்பாகக் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.